ஹலால் விவகாரத்தை விடுங்க.. மதுரையில் மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய கொடி.. இதுதான் மதநல்லிணக்கம்!
மதுரை: மதுரையில் ஸ்ரீமந்தையம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமிய கொடியை ஏற்றி இந்துக்கள் துவக்கி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள ஸ்ரீமந்தையம்மன் கோவில் சக்தி கரகம் எடுக்கும் விழா 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறும் இவ்விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மாலை விழாவின் துவக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கொடிக்கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்னர் கோவில் முன்பாக இஸ்லாமிய கொடியை ஏற்றி விழா துவங்கப்பட்டது.

அனைவரும் ஒற்றுமை
இப்பகுதியில் பல்வேறு ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் நிலையில் அனைவரிடமும் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் சிறப்பாக இஸ்லாமியர்களும் இணைந்து விழாவை கொண்டாடுவதால் இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியேற்றி விழா துவக்கப்பட்டது.

காலம் தொட்ட மரபு
இது பண்டைய காலம் தொட்டு நடைமுறையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சக்தி கரகம் எடுப்பது, முளைப்பாரி எடுப்பது என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். என்னதான் இரு மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை என்பதை சிலர் கிளப்பிவிட்டாலும் இது போன்ற சம்பவங்கள் அந்த கூற்றை பொய்யாகியுள்ளன.

இஸ்லாமிய தர்கா
இந்து கோயிலை முஸ்லீம் கட்டுவது, இஸ்லாமிய தர்காவுக்கு இந்து நபர் நிலம் கொடுப்பது, இறப்பு நிகழ்ச்சியில் பரஸ்பரம் கலந்து கொள்வது என மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. பொங்கலுக்கு பொங்கல் தருவதும், கிறிஸ்துமஸ், ரம்ராஜனுக்கு பிரியாணி தருவதும் என மக்கள் ஒற்றுமையாக கொண்டாடி வருகிறார்கள்.

கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குள் நுழையக் கூடாது என இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கர்நாடகாவில் முஸ்லீம் நடத்தும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சிகளை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். அதற்கு பதிலாக இந்து வியாபாரிகள் நடத்தும் இறைச்சிக் கடைகளில் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இத்தனை கசப்பான சம்பவங்களுக்கு மத்தியிலும் யார் சொன்னாலும் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை காட்டும் அளவுக்கு மதுரை கோயில் திருவிழா சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications