மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் கார்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதம்- பரபரப்பு
மதுரை: மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இன்று மாநில தலைவர் அண்ணாமலையை வழியனுப்ப பாஜக கொடியுடன் வந்த கார்களுக்கு விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பாஜகவினர், போலீசார் இடையே வாக்குவாதம் நடந்தது.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கார் மீது காலணி வீச்சு
முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த வேளையில் மரியாதை செலுத்தும் விவகாரத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இதையடுத்து பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிடிஆர் டுவிட்டர் பதிவு
இந்நிலையில் காரில் வந்து விழுந்த காலணியின் புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று டுவிட் ஒன்று செய்தார். அதில், "நேற்று என் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேச நிறைய உள்ளது. அதுபற்றி பிறகு கூறுகிறேன். இப்போதைக்கு, மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த சிண்ட்ரெல்லாவின் ஒற்றை காலணி பத்திரமாக உள்ளது. அது உங்களுக்கு தேவைப்பட்டால் வந்து வாங்கிச் செல்லலாம், என்னுடைய ஊழியர் அதை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்" எனக்கூறியுள்ளார். மேலும், விமான நிலையத்தின் ஓல்டு டெர்மினல் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் சில நூறு மீட்டர்களுக்கு நடந்த சம்பவம் என கூறி இருந்தால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பாஜகவினரை அங்கு அனுமதித்ததை சுட்டிக்காட்டி இருந்தார்.
பாஜகவினர் காருக்கு அனுமதி மறுப்பு
இது சர்ச்சையாகி உள்ளது. மேலும் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று விமான நிலையத்துக்குள் பாஜகவினர் கொடி கட்டிய வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வர இருந்தார். அவரை வரவேற்று வழியனுப்பும் வகையில் ஏராளமான பாஜகவினர் மதுரை விமான நிலையம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மதுரை விமான நிலைய வளாகத்திற்குள் பாஜக கொடி கட்டிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Recommended Video
வாக்குவாதம் - பரபரப்பு
பாஜகவின் கொடி கட்டிய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அதில் வந்தவர்கள் கோபமடைந்தனர். இதனால் போலீசார் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் இன்று மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.