அண்ணே போன வருஷம் தங்ககாசுகளை அள்ளி இறைச்சாரு! அமைச்சர் மூர்த்தி பற்றி ஓபன் மைக்கில் விழாக்குழுவினர்!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்களுக்கு தங்ககாசுகளை பரிசாக அள்ளி இறைத்த அமைச்சர் மூர்த்தியை விழா குழுவினர் நொடிக்கு நொடி ஓபன் மைக்கில் புகழ்ந்து பேசியதை காணமுடிந்தது.
Recommended Video
அண்ணே போன வருஷமே தங்ககாசுகளை அள்ளி இறைச்சாரு, இந்த வருஷம் இன்னும் நிறைய செய்வாரு என தனது எதிர்பார்ப்பை அமைச்சர் மூர்த்தியிடம் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் வெளிப்படுத்தினார்.
அதேவேளையில் அந்த விழாவில் பங்கேற்ற மற்றொரு அமைச்சரான பழனிவேல் தியாகராஜனை காட்டிலும் மூர்த்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்... சிறந்த காளைக்கு கார் பரிசளிக்கும் முதல்வர் ஸ்டாலின்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் காலை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு அதனை விழா மேடையில் அமர்ந்து கண்டு ரசித்து வருகிறார்கள். அவர்களோடு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், அதிமுக எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் ஜல்லிக்கட்டை ஒரே மேடையில் அமர்ந்து பார்த்து வருகிறார்கள்.
மூர்த்திக்கு புகழாரம்
கடந்தாண்டு கொடுத்ததை போல் இந்தாண்டும் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு தங்ககாசுகளை வாரி கொடுத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி. இது குறித்து ஓபன் மைக்கில் பேசிய ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், அண்ணே போன வருஷமே தங்ககாசுகளை அள்ளி இறைச்சாரு, இந்த வருஷம் இன்னும் நிறைய செய்வாரு என்ற எதிர்பார்ப்பை பொதுவெளியில் வெளிப்படுத்தினார். இதேபோல் வார்த்தைக்கு வார்த்தை அமைச்சர் மூர்த்தியின் புகழ் புராணத்தை அவனியாபுரத்தில் கேட்க முடிந்தது.
முதல்முறையாக கார்
இதுவரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மட்டுமே சிறந்த மாடுபிடிவீரருக்கு கார் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று முதல்முறையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் கார் ஒன்றை பரிசாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் வணிவரித்துறை அமைச்சர் மூர்த்தி. இதனால் அந்த காரை பரிசாக தட்டிச்செல்லும் நோக்கில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர்.
ஆரவாரம் இல்லை
வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெறும் 150 பேர், அதுவும் உள்ளூர்காரர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதனிடையே உலகத்தமிழர்கள் காண்பதற்கு ஏதுவாக அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.