மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் 1 மணி நேரமாக விசாரணை.. படுத்துக்கொண்டே பதில் சொன்ன ஆதீனம்!
மதுரை: மத மோதலை தூண்டும் விதமாக மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரை ஆதீன மடத்திற்கு வருகை தந்த சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படுக்கையில் படுத்தபடியயே சைபர் கிரைம் போலீசாரின் கேள்விகளுக்கு மதுரை ஆதீனம் பதிலளித்துள்ளார்.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முயன்றதாகவும் மதுரை ஆதீனம் குற்றம்சாட்டி இருந்தார்.

கார் விபத்து சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர். தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சிசிடிவி காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் மனு அளித்தார்.
இந்த புகாரின் கீழ் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர், மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம். எனவும், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மதுரை ஆதீனத்துற்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர், மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்து, மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞரான ராமசாமி மெய்யப்பன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் உடன் உள்ளனர்.
மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை ஆதீனத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக வருகை தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் போலீசாரை மதுரை மாநகர பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட பாஜகவினர் உள்ளே விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு, மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தினர்.
படுக்கையில் படுத்தபடியயே சைபர் கிரைம் போலீசாரின் கேள்விகளுக்கு மதுரை ஆதீனம் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்குப் முன்பு மதுரை ஆதீனம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் படுக்கையில் படுத்தபடியே பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications