வந்தாச்சு மணமக்களுக்கான பிரத்யேக மாஸ்க்.. களை கட்டும் மதுரை.. செம புதுமை.. கமகம!
மதுரை: மணமகனுக்கும் மணமகளுக்கும் நறுமணமிக்க பூக்களால் மாஸ்க் தயாரிக்கும் புதுமையான முயற்சியில் மதுரை பூக்கடைக்காரர் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடும்பத்துடன் வாழ்கிறோமோ இல்லையோ கொரோனாவுடன் வாழ பழகிவிட்டோம். எங்கு சென்றாலும் மாஸ்க்கை அணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
விடியற்காலையில் மரங்களுக்கு அடியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இயற்கை காற்று கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்று. ஆனால் அந்த நடைப்பயிற்சியையும் நாம் மாஸ்க்குடன் அணிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்
அது போல் கொரோனா காலம் என்பதால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்த பொதுமக்கள் உரிய அனுமதியுடன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதில் மற்றவர்கள் எல்லாம் சமூக இடைவெளி விட்டு மாஸ்க் அணிந்தவாறு மற்றவர்களுடன் பழக முடியும். ஆனால் மணமகனும் மணமகளும் என்ன செய்வார்கள்.

நீண்ட தூரம்
அவர்களுடன் பரிசு பொருட்களை கொடுக்க கூட்டம் வந்து கொண்டே இருக்குமே. நீண்ட நேரம் மாஸ்க் போட்டாலும் புத்துணர்ச்சி இல்லாத நிலை உள்ளது. இதனால் மல்லிக்கு பெயர் போன மதுரையில் ஒரு பூக்கடைக்காரர் புதுவிதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மலர்களால் ஜடை
பொதுவாக மாலை, செண்டு, ஜடை ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விதவிதமாக கிடைக்கிறது. தற்போதைய நவீன யுகத்தில் வாடாத மலர்களை கொண்டு மாலைகள் தொடுக்கப்படுகின்றன. அதிலும் உடையின் நிறத்திற்கேற்ப மாலைகளும் வந்துவிட்டன. இந்த நிலையில் மல்லிப்பூக்கள் பூக்காமல் அப்படியே மொட்டாக இருக்கவும் சில ஸ்பிரேக்களை கொண்டு பூக்களை அழகுப்படுத்துகிறார்கள்.

விதவிதமான அணிகலன்கள்
ஜடைகளில் ஏலக்காய், பூக்கள், விதவிதமான அணிகலன்களை கொண்டும் தயார் செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், சீமந்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அப்படிப்பட்ட நிலையில் பூக்களால் ஆன மாஸ்க்கை மதுரைக்கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ளார். மதுரை சுவாமி சன்னதியைச் சேர்ந்த மலர் தயாரிக்கும் கலைஞர் மோகன் (40). இவர் மணமக்களுக்கு பூக்களில் முக கவசம் தயார் செய்துள்ளார்.

விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கொரோனா பரவாமல் இருக்க பலர் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் நானும் அந்த வகையில் எனக்கு தெரிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த எனது பூத்தொழிலை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி மலர்களால் ஆன முகக்கவசம் செய்தேன்.

முடிந்த வரை முயற்சி
கொரோனா விழிப்புணர்வுக்கு என்னால் முடிந்த முயற்சி என்ற வகையில் மகிழ்சியாக உள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் திரி பிளே மாஸ்க் மேல் மல்லிகை பூக்கள், கோல்டு ரெட் கலர் டிசைன் பூக்கள் வைத்து கட்டி உள்ளேன். மணமக்கள் பலர் திருமணத்தின் போது வெறும் முகக் கவசம் மட்டுமே அணிந்திருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. என்பதால் மாலைக்கு பொருத்தமான நிறத்தில் முகக் கவசத்தை தயார் செய்து கொடுக்கிறேன்.

கட்டாயம் அணியலாம்
மேலும் இதன் மூலம் மணமக்களே முகக் கவசம் அணிந்திருக்கும் போது நாமும் கட்டாயம் அணியலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படும். திருமண மாலை ஆர்டர் செய்தால் இலவசமாக மாஸ்க் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் மோகன். திருமண விழாக்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த மணமக்களுக்கு மலர்களில் முகக் கவசம் தயாரிக்கும் மோகனின் திறமையும் புதுமையும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

தமிழக அரசு
கொரோனா 3-ம் அலை பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் கலந்துகொள்ள பொதுமக்களுக்குத் தடை விதித்துள்ளது. அதே நேரம் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. எனவே இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனாவை நாமும் பிறருக்கு கொடுக்காமல் பிறரிடம் இருந்து வாங்காமலும் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவந்தோம் என்ற பெருமைப்பட வேண்டும்.

மணமக்கள்
இன்னொரு பக்கம், நிகழ்ச்சிகளில் மக்கள் கட்டுப்பாட்டை மறந்து முகக் கவசம் அணிவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், மணமக்களுக்கு ஏற்கெனவே பட்டு முகக்கவசம், வெள்ளி முகக்கவசம், தங்க முகக்கவசம், வைர முகக்கவசம் எனப் பல டிரெண்ட்களையும் கடந்த இரண்டு கொரோனா அலைகளில் பார்த்துள்ள நிலையில், இப்போது மணமக்களுக்கு மலர்களிலால் ஆன முகக் கவசத்தை மதுரையைச் சேர்ந்த பூக்கடைக்காரர் மோகன் தயாரித்து வருகிறார்.

மலர்களால் ஆன முகக் கவசம்
மாலை அணிந்து மலர் அலங்காரத்துடன் இருக்கும் மணமக்கள் மலர்களால் ஆன முகக்கவசம் அணிந்திருப்பதை பார்க்க அழகாக இருக்கும். புகைப்படங்களிலும், அது ஓர் அழகிய கொரோனா கால நினைவாகப் பதிவாகும். கொரோனா விழிப்புணர்வுக்காக மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, கொரோனா போண்டா எல்லாம் செய்தாச்சு. இப்போது பூக்களால் ஆன மாஸ்க்கும் வந்துவிட்டது. பட்டுப்புடவைக்கு ஏற்க நகைகளையும் அணிகலன்களையும் போடுகிறேன். அது போல் மாலைக்கு ஏற்ப முகக் கவசங்களும் தயார் செய்யப்படுகின்றன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பூக்களால் ஆன முகக் கவசம் வாடாமல் இருப்பதால் அதை அணிந்திருப்போருக்கு புத்துணர்வை கொடுக்கும். மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளதால் மதுரை மல்லியை இந்த முகக் கவசத்தில் பயன்படுத்துவது மதுரைக்கு பெருமையை சேர்க்கும். இது போல் புதிய புதிய முயற்சிகளால் கொரோனா காலகட்டத்தால் நலிவடைந்துள்ள இவர்களை போன்ற சிறு வியாபாரிகள் தலைத் தூக்க வழி கொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications