கொதி நிலையில் மதுரை.. இன்று அமைச்சர் இன்றி ஆளுநர் பங்கேற்கும் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா
மதுரை: ஆளுநர் ரவியை கண்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான 100 வயதை கடந்த சங்கரய்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தகைசால் தமிழர் விருதை வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் மக்கள் தலைவருமான சங்கரய்யா நாட்டுக்காக பட்டப்படிப்பை துறந்த நிலையில், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை ஏற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. ஆனால், இந்த முடிவினை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த கோப்பில் கையெழுத்திட மறுத்தார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது பல்கலைக்கழகத்தின் முடிவு என பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதனை ஏற்காத ஆளுநருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், ஆதரவு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் தீர்மானம் மீண்டும் ஒருமுறை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி. மீண்டும் கையெழுத்திட மறுத்தார். இந்த நிலையில், இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ள உள்ளார். அதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இதில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டித்து பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
எனவே உயர்கல்வித் துறை அமைச்சர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்தற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. மறுபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைச்சரின் முடிவை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கூட்டாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம் எந்தவொரு தனி நபருக்கும் கிடையாது. எனவே பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது, அரசின் கடுமையான கண்டனச் செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு இந்த முடிவினை வரவேற்கிறது. தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் ஆளுநர், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்வது அவமானகரமான ஒன்றாகும். எனவே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்கள் கருப்புக் கொடியேந்தி கண்டனம் முழங்குவார்கள். தமிழ்நாட்டு மக்கள் இந்த போராட்டத்திற்கு பேராதரவு வழங்கிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications