ச்சே.. என் மனைவி அப்படிலாம் இல்ல! அப்பாவியாக சொன்ன கணவன்! ஆடியோவை கேட்டதும் தேம்பி, தேம்பி..பரிதாபம்
மதுரை: மதுரையில் தன்னை கூலிப்படை ஏவி மனைவியே கொலை செய்ய முயன்றதை நம்ப மறுத்த கணவர், கடைசியில் போலீஸார் கொடுத்த ஆடியோவை கேட்டு தேம்பி தேம்பி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தாங்கள் எவ்வளவு கூறியும் தன் மனைவி மீது அபார நம்பிக்கையை வைத்திருந்த அந்த கணவரை கொலை செய்ய எப்படி அவரது மனைவிக்கு மனது வந்தது என போலீஸாரே கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
தனது உலகமே மனைவியும், குழந்தையும் தான் என எண்ணி அவர்களுக்காகவே வாழ்ந்து வந்த கணவருக்கு அவரது மனைவி செய்த துரோகம் மிகக் கொடியது என்றுதான் சொல்ல வேண்டும். இச்சம்பவத்தின் பின்னணி வருமாறு:

மகிழ்ச்சியாக இருந்த குடும்பம்..
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் உள்ள ஜி.ஆர். நகரைச் சேரந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு வைஷ்ணவி (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. செந்தில்குமார் சிறு வயதிலேயே தாய் - தந்தையை இழந்தவர் ஆவார். அதனால் மனைவி, குழந்தை என தனக்கென்று ஒரு சொந்தம் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்திருக்கிறார். இன்ஜினியரான செந்தில்குமார், மதுரையில் உள்ள நிறுவனத்திலேயே முதலில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால், குழந்தையை பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைத்ததால் ஃபீஸ் கட்டுவதற்கே அவரது வருமானம் சரியாக இருந்தது.

வெளிநாட்டில் வேலை.. கள்ளக்காதல்..
இதனால் அதிகம் சம்பாதிப்பதற்காக மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகளாக செந்தில்குமார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில், செந்தில்குமார் மனைவி வைஷ்ணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது குழந்தை பள்ளிக்கு சென்றதும் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் செந்தில்குமார் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவியிடம் இனி வெளிநாட்டுக்கு போவதில்லை எனக் கூறியிருக்கிறார்.

கூலிப்படையை ஏவி..
செந்தில்குமார் இங்கிருந்தால் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்குமே என எண்ணிய வைஷ்ணவி, தனது கணவனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, கள்ளக்காதலன் வெங்கடேசனுடன் சேர்ந்து கூலிப்படையை தொடர்புகொண்ட வைஷ்ணவி, அவர்களுக்கு ரூ.15 லட்சம் கொடுத்து தனது கணவனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இதன்படி, கடந்த 22-ம் தேதி தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும் வழியில் செந்தில்குமாரை கூலிப்படையினர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

தேம்பி தேம்பி அழுதார்..
இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, செந்தில்குமாரை கொலை செய்ய ஆள் அனுப்பியது அவரது மனைவியும், கள்ளக்காதலனும் தான் எனக் கண்டுபிடித்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று செந்தில்குமாருக்கு சுயநினைவு திரும்பியதும், அவரிடம் போலீஸார், "உங்களை கொலை செய்ய உங்கள் மனைவிதான் ஆள் அனுப்பினார்" எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால், போலீஸார் சொல்வதை செந்தில்குமார் நம்பவே இல்லை. என் மனைவி அப்படிப்பட்ட ஆள் கிடையாது சார்.. அவர் அப்படி செய்ய மாட்டார் என உறுதியாக கூறியிருக்கிறார் செந்தில்குமார். பின்னர், கூலிப்படையினரிடம் வைஷ்ணவி செல்போனில் பேசிய ஆடியோவை போலீஸார் போட்டு காண்பித்துள்ளனர். இதை கேட்டதும், செந்தில்குமார் சிறு குழந்தையை போல தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். இதை பார்த்த அங்கிருந்த போலீஸாரும் கண்கலங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications