என்ன கொடுமை இது? ஏதாவது ஆச்சுனா யார் பொறுப்பு? ஒரே ஸ்ட்ரெச்சரில் இரு கர்ப்பிணிகள்! மதுரை அவலம்
மதுரை: தென் தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இரு கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் தர்மராஜ் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அவசர தேவைகளுக்காக உயிர்காக்கும் சிகிச்சைக்காகவும் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் ஒருசேர செயல்பட்டு வருவதால் தங்கள் உயிர் காக்கும் உன்னத மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைத் தென் மாவட்ட மக்கள் நம்பி அதில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ மனையில் தலைக்காயம், நுரையீரல், புற்றுநோய், மகப்பேறு பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் வசதிகள் இருக்கின்றன.
இங்கு நாள்தோறும் சுமார் 20,000 மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சேவை குறைபாடு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களும் எழுந்து நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த இரு கர்ப்பிணிகளை ஒரே ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை பணியாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாததால் இதுவரையும் ஒரே ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் இந்த புகைப்படத்தை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தராஜ் என்பவர் வெளியிட்டு பள்ளமான தார் சாலை மற்றும் தாழ்வு பகுதியில் ஆபத்தான முறையில் ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து மருத்துவமனை பெண் பணியாளர் ஒருவர் முன்னே எழுத்துச் செல்ல அதன் பின்னே நோயாளியின் உறவினர் தள்ளி கொண்டு செல்கிறார்.. எங்கே ஸ்ட்ரெச்சரின் சக்கரம் முறிந்து விழுந்து விடுவோமோ என்ற உயிர் பயத்தில் கர்ப்பிணி பெண்கள் செல்கின்றனர். சுகாதாரத்துறை இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வரான தர்மராஜ் விளக்கம் அளித்துள்ளார் மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்கும் நிலையில் ஏன் ஒரே ஸ்ட்ரெச்சரில் இரு கர்ப்பிணிகளை வைத்து அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications