திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் பதட்டம் நிலவுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் மலையில் அமர்ந்து நவாஸ் கனி அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையில் நான் பிரியாணி சாப்பிட்டேன் என நிரூபிக்காவிட்டால் அண்ணாமலை பதவி விலகுவாரா? அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை நவாஸ் கனி அவரது சமூக வலைதள பக்கத்திலேயே பகிர்ந்து இருந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க இன்று போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதில் பல இந்து அமைப்புகளும் கலந்து கொள்வார்கள் என அறிவித்தது. இந்த நிலையில் இந்து முன்னணி போராட்டத்தை முன்னிட்டு சுவரொட்டி ஒட்டியவர்கள், நோட்டீஸ் வழங்கியவர்களை காவல்துறையினர் கைது செய்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த போலீசார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "இன்று காலை முதல் நாளை இரவு வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் பொதுமக்கள் அமைதியை பாதுகாக்கும் வகையில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications