இளைஞர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்... மதுரை பரப்புரையில் கமல் அறைகூவல்..!
மதுரை: இளைஞர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திக் காட்ட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறைகூவல் விடுத்துள்ளார்.
மக்களின் குறைகளை தேடி தீர்க்க வேண்டும் என்பதே தாம் அரசியலுக்கு வந்ததற்கான நோக்கம் எனக் கூறியுள்ளார்.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை மதுரையில் இன்று தொடங்கிய அவர் தொழில் வர்த்தக சபை அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடிய போது இதனைக் கூறினார்.

மதுரையில் பரப்புரை
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட மதுரையில் இருந்தே சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் கமல் தொடங்கியுள்ளார். மதுரையில் மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும் எனக் கூறிய கமல் கலாச்சார நகரமான மதுரையை அழித்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டினார். மேலும், மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

விசில் சத்தம்
நமது ஆட்சி அமைவது உறுதி என்றும் மக்கள் ஆணையிட்டால் மக்களை காக்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் கமல். கமல்ஹாசனின் உணர்ச்சிகரமான இந்தப் பேச்சைக் கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி விசில் பறக்கவிட்டனர். எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி தான் தாம் என்றும் அவரது கனவை நிறைவேற்றிக்காட்டுவேன் எனவும் கூறினார்.

ஏன் அரசியல்?
வெறுமனே நற்பணி செய்தால் மட்டும் போதும் என நினைத்து தன்னால் இருக்க முடியவில்லை என்றும் இந்த மக்களுக்கு என்ன செய்தாய் என்ற கேள்வி கண்ணாடியை பார்த்து சவரம் செய்யும் போது எழுந்தால் அதற்கு பதில் அளிக்க முடியும் அளவுக்கு நான் ஏதேனும் செய்திருக்க வேண்டும் என்றார். தன்னை வாழ வைத்தவர்களின் ஏழ்மையை துடைத்தெறியவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

நேர்மை மட்டுமே
காந்தியும், பெரியாரும் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை என்றும் தனது கட்சியின் கொள்கையும், லட்சியமும் நேர்மை ஒன்று மட்டுமே என பெருமிதம் தெரிவித்தார். ஜனவரி மாதம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை போல் மே மாதத்தில் கயவர்களுடன் நடைபெறவுள்ள மல்லுக்கட்டுவுக்கு தாம் தயாராக இருப்பதாக அதிரடி காட்டியுள்ளார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications