துரை வைகோ எப்பவும் தனி ரூட்தான்! இந்தியா கூட்டணி அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காதாம்!
மதுரை: லோக்சபா தேர்தலில் 'இந்தியா' கூட்டணிவென்று மத்தியில் ஆட்சியை அமைக்கும்; அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தாலும் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டவர் துரை வைகோ. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என பொது மேடையில் ஆவேசமாகவும் அழுதபடியும் துரை வைகோ பேசியது பெரும் சர்ச்சையானது. பின்னர் திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் துரை வைகோ பேசியது அடுத்த சர்ச்சையானது. இதனால் திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்தது.

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் தடுமாறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோ அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி உள்ளார்.
மேலும் லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றும் என கணித்திருக்கின்றன. திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெல்வார் எனவும் கணித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை அருகே அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, எக்ஸிட் போல் முடிவுகள்தான் தேர்தல் களத்தை வெளிப்படுத்துகின்றன. மக்கள் மனதில் என்ன இருந்தது என்பதை பார்த்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் எக்ஸிட் போல் முடிவுகள் உள்ளன.
மத்தியில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இன்னும் 48 மணிநேரத்தில் மக்களுக்கு அனைத்தும் தெரிய வரும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிதான் என்கிற கணிப்புகளை நம்ப வேண்டாம்.
மேலும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் மதிமுக நிச்சயம் பங்கேற்காது. இவ்வாறு துரை வைகோ கூறினார்.
அத்துடன் அண்ணாமலை தொடக்கம் முதலே தவறான கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போகும் என அண்ணாமலை பேசியிருப்பது சர்வாதிகாரப் பேச்சு. அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications