"மதுரை மக்களே" நேரில் செல்ல தேவையில்லை.. இனி வாட்ஸ் அப்பில் புகாரளிக்கலாம்.. அறிமுகம் செய்த பிடிஆர்!
மதுரை: மக்களின் வாழ்விடத்தில் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்கக் கோரிய புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக 'உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும்' என்ற உறுதிமொழியுடன் வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சியின் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் முகாம் உள்ளிட்ட முகாம்களில் மனுவாக அளித்து வருகின்றனர்.
இதனிடையே குடிநீர், சுகாதாரம் மற்றும் மற்ற அடிப்படை வசதிகளையும், சேவைகளையும் பெறவதற்கும், குறைபாடுகளை தெரிவிக்கவும் மாநகராட்சியில் வாட்ஸ அப் செயலியுடன் கூடிய ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது.
”மதுரை டைடல் பார்க், வண்டியூர் கண்மாய் புனரமைப்பு” மக்களுக்கு சு.வெங்கடேசன் அளித்த முக்கிய அப்டேட்!
வாட்ஸ் அப் எண் அறிமுகம்
ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இந்த கண்காணிப்பு மையத்தின் செயல்பாடு சொல்லும் அளவிற்கு இல்லை. பொதுமக்கள் மாநகராட்சியின் வாட்ஸ் அப் செயலி நம்பரில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற நிலை நீடித்தது. இந்த நிலையில் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக 'உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும்' என்ற உறுதிமொழியுடன் புதிய தொலைபேசி சேவை மற்றும் வாட்ஸ் அப் எண் 787 166 1787 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிடிஆர் பேச்சு
இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பிடிஆர் பேசுகையில், கவுன்சிலர்கள் இந்த புதிய புகார் எண் மற்றும் இந்த சேவை வசதியினை தங்கள் வார்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை அழைத்து பாராட்டுவேன். அதே சமயம், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் கவுன்சிலர்களை அதிகாரிகளிடம் வலியுறுத்தி அதற்கு தீர்வு காண உதவலாம் என்று தெரிவித்தார்.
செயல்பாடுகள் எப்படி?
இந்த புதிய தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் செய்தால், அந்த புகார்கள் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரின் விபரங்கள் தெரிவிக்கப்படும். அவ்வாறு பெறப்பட்ட புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்படும். ஒருவேளை புகார்கள் நிறைவடையவில்லை எனில் ஆணையாளரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்படும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் வசதி
இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி, வாட்ஸ் அப் மற்றும் www.mducorpicts.com என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப்பட்டு பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த ஒப்புகை எண் மூலமாக புகாரின் நிலையை ஆன்லைனில் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.