வெளிநாட்டுல 4 டிகிரி.. நானே எடுத்துக்காட்டு. இது தான் திராவிட இயக்கம்.. அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி
மதுரை: சமூக நீதிக்காகவும் சமுதாய சமத்துவத்துக்காகவும் கல்வியை அடிப்படையாக வைத்து திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டு சட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம் எனவும், இரண்டு நாடுகளில் படித்தவன் என்ற அடிப்படையில் கல்வியோடு முக்கியத்துவம் மற்றும் அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு என தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மதுரை மாநகரில் மதுரைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," இத்தகைய திட்டங்களை தீட்டுவது முதலமைச்சர் இருக்கும் பணிகளில் மிக முக்கியமான பணியாக கருதுகிறார். அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார் கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் என்று..
அந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பல சுமார் 2.7 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் பலன் அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு குறிப்பாக இன்றைக்கு இங்கே சுமார் 210 மாணவர்களுக்கு இந்த டெபிட் கார்டு வழங்கி இருக்கிற ஒரு நிகழ்வு இது. பலர் கூறுவார்கள் கல்வியுடைய முக்கியத்துவம் பற்றி. நான் சென்ற வாரம் ஒரு பள்ளியில் அரசு பள்ளியில் உடையும் இருசக்கர வாகனமும் வழங்கும்போது கூறியது, கல்வியுடைய சிறப்பு என்னவென்றால் எல்லா அடுக்கில் இருக்கிற மக்களுக்கும் குடும்பங்களுக்கும் கல்வியுடைய பலன் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும் சமுதாய சமத்துவத்துக்காகவும் கல்வியை அடிப்படையாக வைத்து திராவிட இயக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டு சட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். ஆனாலும் திராவிட இயக்கத்தின் துவக்கங்களை வரலாற்றில் எடுத்துப் பார்த்தால் மிகவும் கல்வி அதிகம் பெற்றவர்கள் தான், திராவிட இயக்கத்தின் துவக்கத்தில் இருந்த தலைவர்கள். அதனால்தான் இதனுடைய முக்கியத்துவத்தை நன்கு அறிந்து அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தவர்களாக இருந்தாலும் அவர்களே நிறைய கல்வி பெற்று கல்வியோட பலன் அனைவருக்கும் சேரும் என்பதற்காகவே இந்த இயக்கத்தோடு முக்கிய இலக்காக கட்டாய கல்வி சட்டத்தை 1921 ஆம் ஆண்டிலேயே நீதி கட்சி ஆட்சி உருவாக்கியது.
கட்டாய ஆரம்ப கல்வி சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நூற்றாண்டுக்கு மேல் அதன் அடிப்படையில் இன்றைக்கு தமிழ்நாடு இந்த இடத்தில் இருக்கிறது. அதாவது கல்லூரி செல்லக்கூடிய வயதில் இருக்கிற இளைஞர்களுடைய எத்தனை சதவீதம் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்ற கணக்கு தான் சராசரி சுமார் 25 சதவீதம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டோட அளவு 50% பக்கத்தில் இருக்கிறது. நாட்டிலேயே முதலில் நாம் இருக்கிறோம். இதை தொடர்ந்து நாம் தக்க வைக்கணும் அதிகரிக்கனும் என்பதற்காகவே இத்தகைய திட்டங்கள் தீட்டி முதலமைச்சருடைய அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனுடைய விளைவு வரும் ஆண்டுகளில் வரும் தலைமுறைகளில் நம்ம அனுபவிப்போம் என்ற நம்பிக்கையிலும் இதன் வழியில் வந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் நானும் முதலமைச்சர் கூறிய வகையில் நான்கு டிகிரி, நான்கு வெவ்வேறு துறைகளில் 3 பல்கலைக்கழகங்களில் இரண்டு நாடுகளில் படித்தவன் என்ற அடிப்படையில் கல்வியோடு முக்கியத்துவம் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.












Click it and Unblock the Notifications