மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை
சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் அப்பாவி உயிர்கள் பலியானது கவலை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று மாலை 6 மணிக்குமேல் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று மாலை மதுரையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் மின்சாரம் இல்லாததால் நேற்று நள்ளிரவு முதல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் செயல்படவில்லை என புகார் எழுந்தது.

இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் 2 பேர் இன்று உயிரிழந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின் தடையால் அப்பாவி உயிர்கள் பலியானது கவலையளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகம், சுகாதாரத்துறையின் அலட்சியமே முழுக்காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசு முழு பொறுப்பேற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதனிடைய ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம், மின்தடையால் வெண்டிலேட்டர் செயல்படாமல் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications