நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
மதுரை: இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்றும், பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் பாடுபட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை என்.குன்னத்தூர் கிராமத்தில் 317 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக் கடன், வேளாண் உதவி, முதியோர் உதவித் தொகை, செம்மறி ஆடு உள்ளிட்ட ரூ.1.59 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இது தான் எனது ஆசை! அதை நிறைவேற்றுவீர்களா! கரூரில் உறுதி வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
பாரபட்சம் கிடையாது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, "தமிழ்நாடு முதலமைச்சரும், நாங்களும் திமுகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பார்த்தது கிடையாது. யாரிடமும் ஏற்றத்தாழ்வும், பாரபட்சமும் காட்டியதே இல்லை.
கட்சி தேர்தலோடு முடிந்தது
அரசு திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திமுக என்ற கட்சி என்பது தேர்தல் நேரத்தோடு முடிந்துவிட்டது. அதன் பின்பு அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளாகவே எங்களை நாங்கள் பார்த்து வருகிறோம். முன்பெல்லாம் ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின்
அந்த காலம் மாறி மக்களை தேடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். முதலமைச்சர் தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
எளிமையான முதலமைச்சர்
தமிழ்நாடு அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்தாக வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறீர்களா என்று விபரங்களை கேட்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்." என்றார்.