பழமையான கட்டிடம் இடிந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு..மனைவிக்கு அரசு வேலை
மதுரை: மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சரவணன், கண்ணன் ஆகிய காவலர்கள் கீழவெளி பகுதியில் நள்ளிரவு வழக்கபோல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இருவரின் மீதும் திடீரென இடிந்து விழுந்தது.
Recommended Video
இருவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் காவலர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காவலர் உயிரிழப்பு
ஆனால் காவலர் சரவணன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடம் 110 ஆண்டுகள் பழமையானது ஆகும். மதுரை மாநகராட்சி சார்பில் 80 ஆண்டு கடந்த பழங்கால கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

செவிசாய்க்கவில்லை
ஆனால் நோட்டீஸ் அனுப்பியும் கட்டிட உரிமையாளர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாநகர் பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

25 லட்சம் இழப்பீடு
இந்த விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்த காவலர் கண்ணனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், படுகாயம் அடைந்தவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் மூர்த்தி
தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சரவணன் உடலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் காவலர் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பழைய கட்டிடங்ககளை கண்காணித்து முன்கூட்டியே அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பெரிய விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications