நமக்கும் ஒரு நம்பிக்கை ‘தளபதி’..மதுரையில் தூண்டில் போடும் ஓபிஎஸ்! சமாதான புறாவை பறக்க விடும் இபிஎஸ்!
மதுரை : அதிமுகவில் சில மாவட்டங்களில் தனக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட தலைமையகங்கள் தளபதிகள் இல்லாததால் பின்னடைவு இருப்பதாகக் கருதும் ஓபிஎஸ் , முதற்கட்டமாக மதுரையில் இருக்கும் நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கி உள்ளது.

பாஜக கூட்டணி
பாஜக தனித்து போட்டியிட முடியுமா என மறைமுகமாக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக் கொண்டாலும் கட்சிக்கும் தன்னையே தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவு
சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்சை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்தி இல்லை
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் மக்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ள அவர்கள் சமுதாய வாக்கு வங்கிக்காக ஓபிஎஸ் தரப்பில் இருக்க முடிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அது சுமூகமாக முடிந்திருக்கிறதாகவும், ஓ.பன்னீர்செல்வம் 'மாஜி' சந்திப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள். ஆனாலும் ஓபிஎஸ்க்கு இந்த அணி தாவல்களில் திருப்தி இல்லை எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 'ஸ்ட்ராங்கான தளபதிகள்' இருக்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, கேபி முனுசாமி, விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் அறிந்த நபர்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் ஒரு தருமர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருக்கின்றனர். குறிப்பாக எடப்பாடிக்கு மதுரையில் ஆர்.பி.உதயகுமார் போல் முக்கிய தளபதி இல்லாதுதான். இதனால் பின்னடைவு இருப்பதாகக் கருதும் ஓபிஎஸ் , முதற்கட்டமாக மதுரையில் இருக்கும் நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை ’தளபதி’
பெரியகுளத்தில் இருந்தாலும் கைலாசபட்டி பண்ணை வீட்டில் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிக்கடி சந்தித்தவர் ஆர்பி உதயகுமார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஓபிஎஸ் எடப்பாடி என மாறிமாறி பயணித்தவர் தற்போது எடப்பாடி முகாமிலேயே தங்கி உள்ளார். அதற்கு பரிசாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் தான் ஓபிஎஸ்க்கு எதிராகவே களமிறங்கியுள்ளார். இதனால் மதுரையில் ஒரு முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசி வருவதாகக் கூறுகின்றனர் ஓபிஎஸ் அணி ர.ர.க்கள்.

ஆர்பி உதயகுமார்
மதுரையில் ஆர்பி உதயகுமார் செல்லூர் ராஜு ஆகியோருக்கு எதிராக அரசியல் செய்துவரும் அந்த நிர்வாகி உடன் இணக்கம் காட்ட தொடங்கி இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. இதனால் அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டமான மதுரையில் தனக்கான ஆதரவு வட்டம் இன்னும் அதிகரிக்கும் என நம்பும் ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார் செல்லூர் ராஜு ஆகியோருக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். அந்த நிர்வாகி உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சுபமாக முடிந்த நிலையில் விரைவில் சந்திப்பு இருக்கும் என்கின்றனர்.

சமாதானம்
அதே நேரத்தில் இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் சென்றிருக்கிறது. கடந்த காலங்களிலும் தற்போதும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் எதற்காக அணி தாவ வேண்டும் நம்முடனே இருங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கிற ஆதரவு நிச்சயம் கிடைக்கும் எனக் கூறி சமாதானம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் அணி தாவ பேச்சுவார்த்தை மறுபுறம் சமாதான பேச்சு வார்த்தை என இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த முக்கிய நிர்வாகி குழப்பத்தில் இருக்கிறார் என்கின்றனர் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications