இறுதி தீர்ப்பு இறைவன் கையில்.. மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்
மதுரை: அதிமுகவின் கொடி, பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த வழக்கில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இறுதி தீர்ப்பு இறைவன் கையில் என தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த துறைக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். சாதிய கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் அடித்தளமான கருத்து. நீட் தேர்வுக்கும் சாதிய கொடுமைகளுக்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளது என்றார்.
அப்போது அதிமுக மேல்முறையீட்டு மனு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ஓபிஎஸ் கூறுகையில் இறுதி தீர்ப்பு இறைவன் கையில் என தெரிவித்துள்ளார். முன்னதாக சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் உயர்நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக அதிமுக கரை வேட்டியை அணியாமல் வேறு சாதாரண வேட்டியை அணிந்திருந்தார்.
அது போல் முதல்முறையாக அவருடைய காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டு பயணம் செய்தார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த
தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வதுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென புதன்கிழமை அன்று ஓ.பி.எஸ். சார்பில் முறையிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நேற்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால், மனு நேற்று பட்டியலிடப்படாத நிலையில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தார். இன்றே (நேற்றே) விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
முறையீடு செய்யப்பட்ட அன்றே மனு தாக்கல் செய்யாத நிலையில் எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். புதன்கிழமை (நவம்பர் 15ஆம் தேதி) விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications