நயினாரிடம் என் செல்போன் நம்பர் இருக்கு.. அவர் தொடர்பு கொள்ளலாம்.. ஒரே போடாக போட்ட ஓபிஎஸ்!
தேனி: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய செல்ஃபோன் எண் உள்ளது.. அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் - ஓபிஎஸ் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயார் என்று கூறி இருந்தார்.
அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்பின் அதிரடியாக முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு, ஆதரவாளர்களுடன் ஆலோசனை என்று நடத்தினாலும், ஓபிஎஸ் பக்கம் பெரியளவில் கவனம் திரும்பவில்லை. அதேபோல் செப்டம்பர் 4ல் நடக்கவிருந்த மாநாட்டையும் ஒத்தி வைக்க ஓபிஎஸ், விரைவில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் திடீரென அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்திலேயே செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார்.
ஆனால் செங்கோட்டையனின் திடீரென எதிர்ப்புக் குரல் காரணமாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையனின் குரலுக்கு ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் டெல்லி சென்ற செங்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் சமரசம் பேசத் தயார் என்று அறிவித்தார். இதனால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் மைலேஜ் கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊரான தேனியில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஓபிஎஸ் பேசுகையில், செங்கோட்டையனின் எண்ணமும், செயலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.. அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்பது தொடர்பாக செங்கோட்டையன் பேசி இருக்கிறார். அதேபோல் தம்பிதுரையின் கருத்து தொடர்பாக எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அதிமுக இணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்.
செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன். அப்போது அனைவரிடமும் சொல்லிவிட்டுதான் செல்வேன். துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் என்டிஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே வாழ்த்து கூறிவிட்டேன். அவருக்கு ஆதரவாக எங்கள் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் வாக்களித்திருக்கிறார்.
தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினால், நீங்கள் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, என்னுடைய செல்போன் எண் உள்ளது. அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் என்று தெரிவித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலமாக ஓபிஎஸ் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications