நீங்க பார்த்துக்கிட்டே இருங்க..போற போக்குல அதிமுக, திமுகவில் ஐக்கியமாகிவிடும்- அமைச்சர் கிண்டல்
மதுரை: வருங்காலத்தில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலை போல் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் திமுக வென்ற எண்ணிக்கையில் பாதிக்கு பாதி இடங்களை கூட அதிமுக பெறவில்லை.

கூட்டணிக் கட்சி
இந்த முறை இந்த கூட்டணி கட்சியால்தான் தோற்றோம் என பழிப்போடுவதற்கும் வழியில்லாமல் அதிமுக தனித்து போட்டியிட்டுள்ளது. அதாவது வெற்றிக்கும் சரி தோல்விக்கும் முழுக்க முழுக்க அதிமுகவே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்களின் சொந்த வார்டுகளிலேயே அதிமுக தோல்வி அடைந்ததை தொண்டர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரட்டை தலைமை
இரட்டை தலைமையால் கட்சியில் ஏற்கெனவே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் பெரும் கலக்கத்தை கட்சியில் ஏற்படுத்தியிருப்பதாகவே சொல்லப்படுகிறது. பணபலத்தால், ஜனநாயகத்தை மீறி திமுக வென்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அமைச்சர் பெரியசாமி
இந்த நிலையில் திமுகவின் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வருங்காலத்தில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நகர்ப்புறத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications