எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்
மதுரை: 17 வயது சிறுமியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் காதலன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மாயமாகிவிட்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபா (29) என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாகூர் ஹனிபா
நாகூர் ஹனிபாவும் காணாமல் போயிருந்தார். இதனால் அவர் சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற பெயரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3 ஆம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம், மயக்க நிலையில் இருந்த சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

பதறிய தாய்
மகளின் நிலையை கண்டு பதறிய தாய், உடனடியாக மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் பரிந்துரையின் பேரில் மேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே இருந்தது. இதனால் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் திடுக் தகவல்
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கொடுத்தார். இதுகுறித்து நாகூர் ஹனிபா போலீஸில் கூறுகையில், நானும் அந்த சிறுமியும் காதலித்தோம். என் நண்பர் பெருமாள் கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கும் சிறுமியை அழைத்து சென்றேன்.

சிறுமி கடத்தல்
அங்கு சிறுமியை தங்கவைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாய் மதினாபேகம் என்னை தொடர்பு கொண்டு, சிறுமியை தேடி வருவதாகவும், என்னையும் தேடுவதாகவும், ஊருக்குள் நீதான் சிறுமியை அழைத்து சென்றுவிட்டதாக பேசுகிறார்கள். இந்த விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சினையாகும் என்றார்.

எலி மருந்து
இதை வைத்து அந்த சிறுமியை பயமுறுத்தினேன். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன். அவரும் சரி என்றார். உடனே எலி மருந்தை வாங்கி வந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன். ஆனால் நான் மட்டும் சாப்பிடவில்லை. இதனால் சிறுமியின் உடலநிலை சரியில்லாததால் மதுரைக்கு அழைத்து சென்று எனது தாயிடம் ஒப்படைத்து அந்த சிறுமியை அவரதுதாயிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தேன் என நாகூர் ஹனிபா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

8 பேர் கைது
இவரது வாக்கு மூலத்தின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

மறியல்
சிறுமியின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications