பாஜகவை சும்மா சொல்லக்கூடாது! நல்ல வளர்ச்சி தெரியுது! அதிமுக அழியும் சூழல்! பூவை ஜெகன்மூர்த்தி கவலை!
மதுரை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை குறைத்து எடை போட முடியாது என்றும் அக்கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிவதாகவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அப்போது தான் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் கணித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து சிலர் விலகியிருப்பதால் தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலா இல்லாததால் தான் அதிமுக ஆட்சியை நழுவவிட்டதாக பூவை ஜெகன்மூர்த்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற இடத்தை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே அடைய முடியும் என்றும் மற்ற எந்தக் கட்சிக்கும் அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். நாங்களும் எதிர்க்கட்சி என்று எந்தக் கட்சி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் என்றும் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும் பாஜகவை சூசகமாக தாக்கினார்.
தமிழக அரசியலை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் தனித்துவமானது என்றும் இங்கு திராவிடக் கட்சிகளை மீறி தேசியக் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு என்றும் திராவிடக் கட்சிகளுடன் வேண்டுமானால் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளலாம் எனவும் பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.