525 + 3,327 என்னாச்சு இதெல்லாம்? - திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சரமாரி கேள்வி!
மதுரை : திமுக அரசால் வெளியிடப்பட்ட 3,327 அறிவிப்புகளின் தற்போதைய நிலை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திட முதலமைச்சர் முன்வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 525 வாக்குறுதிகள் பற்றிய உண்மை நிலையை முதல்வர் சொல்லத் தயாரா என்றும் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறதா? நிதி ஒதுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என பல சந்தேகங்கள் பல மக்கள் மத்தியில் எழுந்துள்ளன என்றும் உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பூஜ்ஜியம்
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்த எதிர்பார்ப்பு எல்லாம் பூஜ்ஜியமாக காட்சியளிக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் வழங்கினார். அது குறித்து உண்மை நிலையை சொல்ல தற்போது அவர் தயாராக இல்லை.

3,327 அறிவிப்புகள்
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று முதல் ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், முதலமைச்சர் செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட ஆய்வு பயணங்களில் போது 77 அறிவிப்புகள், முதலமைச்சர் உரையின் வழியாக 46 அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்கள் மானிய கோரிக்கையின் போது 2425 அறிவிப்புகள் என 3,327 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

செயல் வடிவம் காட்டப்படுமா?
அந்த அறிவிப்புகளுக்கு அரசு செயல் வடிவத்தை காட்ட முயற்சிக்கிறதா? அதுமட்டுமல்ல அது 110 விதியின் கீழ் அரசு பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7,500 கிலோமீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 2,200 கோடி நிதியும், என மொத்தம் சுமார் 12,300 கோடி மதிப்பில் நிதி தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் எத்தனை பணிகள் எடுக்கப்பட்டுள்ளது எத்தனை பணிகளுக்கு டெண்டர் பணி எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அரசால் வெளியிடப்படவில்லை.

மரண சாலைகள்
வடகிழக்கு பருவமழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழி தோண்டப்பட்டு பள்ளமாக உள்ளது, மழை நீரால் சாலை பள்ளம் அடைந்துள்ளது. ஒருபுறம் குழி மறுபுறம் பள்ளம் என உயிருக்கு அச்சுறுத்தும் வண்ணம் படுகுழிகள் உயிர்ப்பலிவாங்கும் மரண சாலைகளாக உள்ளது. நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சில அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கிலோ மீட்டர் சாலையில் அமைந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
இதில் 6,000 கிலோமீட்டர் சாலைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக 2,200 கோடி வழங்கப்படும் என்றும், இது தவிர சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதி குழு, மானிய திட்ட நிதி, நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் இப்படி பல்வேறு நிதிகளை ஒருங்கிணைந்து 7,388 கோடியில் மதிப்பில் 16,390 கிலோமீட்டர் சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரையில் படுமோசம்
மதுரையை எடுத்துக்கொண்டால் சாலையில் எல்லாம் படு சேதாரமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. முல்லைப் பெரியார் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. சென்னையில் மழை வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிர்பலி ஏற்பட்டது போல், மதுரையிலும் அது தொடர்கதையாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் எல்லாம் இருசக்கர வாகனத்தில் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே நகர்புற மேம்பாட்டு சாலை மேம்பாட்டு திட்டத்தில் 7,388 கோடி நிதியில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு முதலமைச்சர் நிதியை ஒதுக்கி தருவாரா?

எடப்பாடியார் ஆட்சியில்
எங்கேயும் இதுவரை ஒரு மராமத்து பணி கூட தொடங்கப்படவில்லை. இது வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது. மதுரை மாநகராட்சி மட்டும் 1253 சதுர கிலோமீட்டர் குடியிருப்பு சாலையில் உள்ளது. இந்த 1253 சதுர கிலோமீட்டர் சாலைகள் முழுவதும் சேதாரம் அடைந்து உள்ளது. முதலமைச்சர் 19.10.2022 வெளியிட்டுள்ள நகர்ப்புற மேம்பாடு திட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டபணிகள் எந்த நிலையில் உள்ளது? அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோர் ஆட்சி காலத்தில் இது போன்ற நிலை இருந்ததில்லை. தற்போது மதுரை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் இல்லையோ என்று மக்களிடத்தில் கவலை ஏற்பட்டுள்ளது.

பாரபட்சம் காட்டப்படுகிறதா?
மதுரை மாவட்டத்திலுள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் அரசு சீர்செய்ய முன்வருமா? ஏனென்றால் இதுகுறித்து இந்த மாவட்டத்தின் அமைச்சரே சாலைகளை சீர்செய்யவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள நிலை என்ன? மதுரை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறதா? நிதி ஒதுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என பல சந்தேகங்கள் பல மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆகவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அரசு அரசு முன்வருமா?" என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications