8 வழிச்சாலை இருக்கட்டும்.. எங்களுக்கு வழி சொல்லுங்க! படத்தில் உள்ளது என்ன? கேட்கும் மதுரைகாரர்கள்
மதுரை: மதுரையில் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் பாதையின்றி தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை அமைப்பது தொடர்பான விவாதங்கள் தற்போது சூடு பிடித்து இருக்கின்றன. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 8 வழிச்சாலைக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் திமுக அரசு கடந்த ஆட்சிகாலத்தில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது ஆதரிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளன.
என்னாது.. சென்னை - சேலம் 8 வழிச்சாலை வரப்போகிறதா? லோக்சபாவில் நிதின் கட்கரி அளித்த பதில் இதுதான்!
மதுரையின் சாலை
நிலைமை இவ்வாறு இருக்க 8 வழிச்சாலை இருக்கட்டும். எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க என்று சமூக வலைதளங்களில் கேட்கத் தொடங்கி உள்ளார்கள் மதுரைகாரர்கள். ட்விட்டரில் நானும் மதுரைகாரண்டா என்ற ஐடியில் 4 புகைப்படங்கள் பதிவிடப்பட்டு இருக்கின்றன. சாலையே இல்லாமல் சேறும் சகதியுமாக இருக்கின்ற அதில் உள்ள பாதைகள்.
சேறும் சகதியுமான பாதைகள்
அதில் ஒரு படத்தில் டெம்போ வாகனம் சேறும் சகதியுமான அந்த பாதையில் ஒரு பக்கம் சாய்ந்தபடி செல்கிறது. மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சகதியான இந்த பாதையில் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டே நிற்கின்றன. இந்த படங்களை பகிர்ந்து சாலைகளை தயவு செய்து சீரமையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு
"பல முறை மதுரை மாநகராட்சியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த அளவுக்கு இது மோசமென்றால் இந்த பாதையில் சரியாக நடக்கக்கூட இயலவில்லை." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அடுத்த பதிவில், மதுரை மாநகராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட சந்தானம் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோடு என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
90% வீதிகள்
இந்த பதிவின் கீழ் மதுரை மாநகராட்சியை குற்றம்சாட்டி பலரும் கருத்திட்டு வருகின்றனர். அருண் குமார் என்ற நபர், "மதுரையின் 90% வீதிகளில் உள்ள சாலைகள் சகதியாகவே உள்ளன. நெல் விவசாயம் செய்வதற்கு தயாராக இருப்பதைபோல் உள்ளது. 2 ஆண்டுகளாக கழிவுநீர் குழாய் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் இதுமிகவும் மோசமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.