ஒடும் ரயிலில் கத்தியை காட்டி..பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி..வட மாநில கொள்ளையர்கள் அட்டகாசம்
மதுரை: திருமங்கலம் அருகே ஓடும் ரயிலில் பகல் நேரத்தில் பெண் பயணியிடம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கத்திமுனையில் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி லட்சுமி இவர்களது மகன் திருச்சியில் வசித்து வருகிறார்.
மகனைப் பார்ப்பதற்காக தம்பதியினர் நேற்று இந்த ரயிலில் திருச்சிக்கு பயணம் செய்தனர். இதற்காக 2ஆம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரயில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு மாலை சுமார் 4.30 மணியளவில் திருமங்கலம் குண்டாறு ரயில் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது, குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.

கத்தியை காட்டி மிரட்டல்
அப்போது, சுந்தரம் இயற்கை உபாதையை கழிக்க சென்றிருந்தார். இந்த நிலையில், பெண் பயணி தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெட்டியில் பயணம் செய்த 3 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர்.

கூச்சலிட்ட லட்சுமி
இதனைக்கண்ட லட்சுமி, பயத்தில் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதனால், சுதாரித்து கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச்சென்றனர். இதனால், அவரது நகை திருடர்களின் கையில் சிக்காமல் தப்பியது.

தப்பி ஓடிய திருடர்கள்
இதற்கிடையே, சக பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வடமாநிலத்தை சேர்ந்த மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனால் இந்த ரயில் குண்டாறு ரயில் பாலத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் சம்பவம் நடந்த பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். அத்துடன் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ரயில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது.

மதுரையில் விசாரணை
மதுரை ரயில் நிலையத்தில் சம்பவம் குறித்து, லட்சுமி மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் அச்சம்
ஓடும் ரயிலில் நகைகளை கொள்ளையடிப்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அதுவும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் இடங்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டப்பகலில் ஓடும் ரயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications