ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை.. நிர்கதியான 5 குழந்தைகள்.. 3 கவுன்சிலர்களுக்கு வலை
மதுரை: மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஊராட்சி கவுன்சிலர்கள் 3 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மைட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவௌயில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஃபிட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நாகலட்சுமி 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக ஒன்றரை ஆண்டகளாக பணியாற்றி வந்தார். இவர் 5 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதால் மதுரை மாவட்ட ஆட்சியர் இவருக்கு கருணை அடிப்படையில் அந்த பணியை வழங்கியதாக கூறப்படுகிறது.

பேருந்தில் ஏறிய நாகலட்சுமி: இந்த நிலையில் நேற்று மையிட்டான்பட்டியிலிருந்து பகல் 11 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில் நாகலட்சுமி தனது 2 பெண் குழந்தைகளுடன் ஏறினார். பேருந்தில் ஏறும் போதே அவர் மிகவும் சோகமாக காணப்பட்டதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் ஒரு இருக்கையில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் நாகலட்சுமி அமர்ந்திருந்தாராம்.
பேருந்தில் குதித்து தற்கொலை: அந்த பேருந்து சூரக்கோட்டை அருகே ஒரு கோயில் பகுதிக்கு அருகே வந்தது. அப்போது அருகில் இருந்தவர்களிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிய நாகலட்சுமி திடீரென பேருந்தின் முன் பகுதிக்கு சென்று திடீரென குதித்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த நாகலட்சுமி உடனே ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

நாகலட்சுமி இறப்பு: அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து தகவலறிந்த கள்ளக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகலட்சுமியின் உறவினர்கள் கூறுகையில் "100 நாள் வேலைத்திட்ட பணிக்கு வரக் கூடாது என நாகலட்சுமி மிரட்டல்கள் இருந்தன. மையிட்டான்பட்டி பஞ்சாயத்து வார்டு கவுன்சில்ரகள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை மிரட்டினர்.
தற்கொலை கடிதம்: இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் புகார் கூறவே நாகலட்சுமி தனது 3 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இரு குழந்தைகளுடன் வெளியே சென்றார். இந்த நிலையில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது" என உறவினர்கள் கூறினர். மேலும் நாகலட்சுமி தனது குழந்தைகளிடம் கொடுத்திருந்த பையில் ஒரு கடிதமும் இருந்தது. அதை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருந்தார்.
100 நாள் வேலை திட்டம்: அந்த கடிதத்தில் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக என்னை நீங்கள் (ஆட்சியர்)தான் நியமித்தீர்கள். ஆனால் அந்த வேலையை எனக்கு கொடுக்க மாட்டேன் என வார்டு கவுன்சிலர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளர்க் முத்து ஆகியோர் என்னை மிரட்டி தவறான வார்த்தைகளால் பேசினர். இதுகுறித்து நான் கள்ளக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.
கவுன்சிலர்களுக்கு வலை: ஆனால் அந்த 3 பேரும், ஏன் புகார் கொடுத்தாய் என என்னை அவமானப்படுத்தி திட்டினர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு காரணம் கவுன்சிலர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளர்க் முத்து என நாகலட்சுமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பால் குடிக்கும் குழந்தை உள்பட 5 பெண் குழந்தைகள் தாயின்றி தவித்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications