டி.ஆர். பாலு வெச்ச புள்ளி.. கோலம் போடும் திமுக "லீடர்கள்".. எகிறி அடிக்கும் ஸ்டாலின்.. கலங்கும் பாஜக
ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது
மதுரை: ஒன்றிய அரசோடு பேசவேண்டியதை பேசி பெற வேண்டியதை பெறுகிறோம்... அதே நேரத்தில் அவர்கள் ஏதாவது எல்லை மீறினால், உரிமைக்கு குரல் கொடுப்போம். மண்டியிட்டு பழக்கம் இல்லை அதே நேரத்தில் அடாவடித்தனம் செய்ததில்லை" என்று திருச்சி சிவா எம்பி காட்டமாக கூறியுள்ளார்.
10 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, தற்போது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.. இந்த வெற்றியை தமிழகமெங்கும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரையில், திருமங்கலம் ஜவஹர் நகர் பகுதியில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி பங்கேற்று உரையாற்றினார்.
உதகை மலர் கண்காட்சி...முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மொத்தம் 505
அவர் பேசியபோது சொன்னதாவது திமுக கொடுத்த வாக்குறுதிகள் மொத்தம் 505.. நீங்கள் எங்களுக்கு தந்திருக்கிற காலமோ 5 வருடங்கள்.. ஆனால், இந்த ஒரு வருஷத்துக்குள்ளேயே 300 க்கும் மேற்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி... அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானாலும் பணியில் சேரலாம் என்று சொன்னார்கள்.. அதனால் இப்போ என்னாச்சு? மின்சார வாரியத்தில் பல்வேறு துறைகளில் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதியிலிருந்து பணியில் சேர்ந்துவிட்டனர்..
வேலைவாய்ப்பு
யார் வேண்டுமென்றாலும் அதிமுக சொன்னதால்தான், இன்றைக்கு தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
ஆனால், நம் முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? பதவியேற்றதுமே செய்த முதல் காரியம், யார் வேண்டுமானாலும் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டு மக்கள்தான் சேர வேண்டும் என்று மாற்றினார்.. திமுக இப்படி செய்ததால், 6 லட்சம் வேலை வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது..
தங்கங்கள்
அத்தனையிலும் தமிழ்நாட்டு தங்கங்கள் எல்லாம் இடம் பெறுவார்கள்... ஒன்றிய அரசோடு பேசவேண்டியதை பேசி பெற வேண்டியதை பெறுகிறோம்.. அதற்காக அவர்கள் ஏதாவது எல்லை மீறி செய்தால் உரிமைக்கு குரல் கொடுப்போம்.. அதற்காக பேசுகிற உணர்ச்சியும் தெம்பும் திமுகவுக்கு நிறையவே இருக்கிறது... மண்டியிட்டும் பழக்கம் இல்லை அடாவடித்தனம் செய்ததுமில்லை.
பாஜக வெற்றி
பாஜக 2வது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.. கடந்த முறை, ஆட்சியில் சாதனை புரிந்ததால்தான், 2வது முறை ஆட்சி செய்ய நேரிடுகிறது என்று கணக்கு போடுவது தவறு.. நீங்கள் கடந்த முறை எதுவுமே செய்யவில்லை.. வருஷத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னீங்களே? தந்தீங்களா? கருப்பு பணத்தை வைத்து 15 லட்சம் ரூபாய் தருவோம் என்று சொன்னீங்களே? தந்தீங்களா?
ஜிஎஸ்டி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைதானே கொண்டு வந்தீங்க? ரூ.1000, 500 செல்லாது என்று அறிவித்தபோது இந்த நாட்டு மக்கள் எப்படி தவித்து போனார்கள் தெரியுமா? அதெப்படி உங்களுக்கு தெரியும்? கையில் பணம் இருந்தும், அதை பேங்கிலிருந்து எடுக்க முடியாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது 2000 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு எத்தனை பேர் அலைந்தார்கள்? ஜிஎஸ்டி கொண்டு வந்தீங்க.. அதுவும் வெற்றிக்கு காரணம் கிடையாது.. எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்ததுதான் உங்கள் வெற்றிக்கு காரணம்...
வின்சென்ட் சர்ச்சில்
அதனால்தான், தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து உரிய மரியாதை அளித்து எம்பி தேர்தலில் போட்டியிட்டதால், அனைத்து இடங்களையும் திமுக அபாரமாக வென்றது.. ஒரு அரசாங்கம் திட்டங்களைத் தீட்டி அது மக்களுக்கு சென்று சேர்கிறதா என கண்காணிப்பது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் விழித்திருந்து உழைத்த வின்சென்ட் சர்ச்சில், நேரு, கலைஞர் வரிசையில் இன்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்.
சுப்ரீம்கோர்ட்
ஜிஎஸ்டி கவுன்சில் தருகிற பரிந்துரைகளை மாநில அரசு, மத்திய அரசு ஏற்று நடக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.. அதை எதிர்த்து சட்டம் நிறைவேற்றலாம் என்று சுப்ரீம்கோர்ட் சொல்கிறது... மாநிலத்தின் உரிமைகளை காக்க நாங்கள் போராடுகிறோம்... நாடாளுமன்றத்தில், சுப்ரீம்கோர்ட் வழி வகுக்கிறது.. அதை பாதுகாக்க உணர்ச்சியும் தெம்பும் திராணியும் தைரியமும் உள்ள ஒருவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.
ஆதாயம்
சலுகைக்காக, ஆதாயத்துக்காக ஏதோ ஒன்று கிடைத்தது என்பதற்காகவோ எங்களை எங்களது கொள்கையை குறைகூறி லட்சியத்தை எந்த காலத்திலும் இந்த இயக்கம் இழந்ததுமில்லை, இழக்கப்போவதுமில்லை... ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற சரித்திர தலைவர்கள் வரிசையில் அவர்களின் தொகுப்பாக இன்றைய முதல்வர் இருக்கிறார்.. ஒரு ஆண்டுகாலம் நிறைவேறியது" என்றார் திருச்சி சிவா.
பிரதமர்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் திருச்சி சிவா பேசும்போது, "நான் சமீபத்தில் கியூபா நாட்டிற்கு சென்றிருந்தேன். அங்குள்ளவர்களும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சிறப்புகளை பற்றி பெருமையுடன் பேசினர். ஸ்டாலின் சுட்டிக்காட்டும் நபர் தான் அடுத்த பிரதமராக வருவார் என்று பல தரப்பினர் பேசி வந்தனர். ஆனால் அதையும் தாண்டி தற்போது ஸ்டாலின் தான் பிரதமராகவே வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய அரசியலில் எழுந்துள்ளது" என்று பேசியிருந்தார்..
டிஆர் பாலு
அதேபோல, ஒரு தனியார் டிவிக்கு டிஆர் பாலு அளித்திருந்த பேட்டியிலும், ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும்.. அதற்குரிய அனைத்து தகுதியும் அவருக்கு உண்டு என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.. ஆக, இப்படி ஒருபேச்சை திமுக முன்னணி தலைவர்களிலேயே முதன்முதலில் கிளப்பியவர் டிஆர் பாலுதான்.. இப்போது அடுத்தடுத்த தலைவர்கள் அதை வலியுறுத்தி வருவது பாஜக தரப்பை எரிச்சலூட்டி கொண்டிருக்கிறது..!