மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு?
மதுரை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. தோழர் சங்கரய்யா போன்ற ஆண்ட மதுரையில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி களம் காணாததால், தேர்தல் பணிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வம் கட்டவில்லை என்கின்றனர் 'சிகப்பு சட்டை' தோழர்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதிகள் வழங்கப்பட்டன.

2026 தமிழக சட்டசபை தேர்தல்
ஆரம்பத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி கோரியிருந்ததாக கூறப்பட்டாலும், இறுதியில் 5 தொகுதிகளே வழங்கப்பட்டன. இந்த நிலையில், தோழர் சங்கரய்யா, தோழர் ஜானகியம்மாள் போன்ற கம்யூனிஸ்ட் ஜம்பவான்கள் ஆண்ட மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது அந்தக் கட்சியினருக்கு பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 7 தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரை தெற்கு தொகுதி மதிமுகவுக்கும், உசிலம்பட்டி மற்றும் மேலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டுமே கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கூட வழங்கப்படாதது கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தோழர்கள் அதிருப்தி
இதன் காரணமாக தேர்தல் பணிகளில் சில தோழர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1964ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் பின்னர் 1967 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மதுரை மாவட்டத்தில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் கே.பி. ஜானகியம்மாளும், மதுரை மேற்கு தொகுதியில் என். சங்கரய்யாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
சிபிஎம் வரலாறு
பின்னர் 1980ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என். சங்கரய்யா மீண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தொகுதி மறுவரையறைக்கு முன்பு இருந்த மதுரை கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி பல முறை வெற்றி பெற்றுள்ளது. கே.பி. ஜானகியம்மாள், என். சங்கரய்யா மற்றும் என். நன்மாறன் உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கட்சிக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளனர்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு உருவான மதுரை தெற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாதுரை வெற்றி பெற்றதும் கட்சியினரால் நினைவுகூரப்படுகிறது.
இடதுசாரிகள்
மேலும் 2021 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 2026 தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது கட்சியினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட கால வரலாறு கொண்ட மாவட்டத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கட்சியின் அடிப்படை தோழர்கள் மத்தியில் மனச்சோர்வை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications