நெஞ்சே பதறுதே! மதுரையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டு கணவர் கண் எதிரே மனைவியிடம் தாலி செயின் பறிப்பு
மதுரை: மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகே ஷாப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியிடம் ஆர்15 பைக்கில் வந்த மர்ம நபர்கள் நொடிப்பொழுதில் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த பெண் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்படும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மதுரை திருமலைநாயக்கர் மகால் பந்தடி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் துவாரகாந்த். துவாரகாந்த் - மஞ்சுளா தம்பதியினர் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பகுதிக்கு பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள் வாங்க சென்றனர்.

மாட்டுத்தாவணியில் பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. தொடர்ந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது இவர்களை ஆர்15 பைக்கில் இரு மர்ம நபர்கள் ஃபாலோ செய்து வந்துள்ளனர். துவாரகாந்த் - மஞ்சுளா தம்பதியினர் சரியாக வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை விட்டிவிட்டு இறங்கும்போது, அவர்களை பின் தொடர்ந்து வேகமாக வந்த பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் கிடந்த தாலிச்செயினை பிடித்து இழுத்தனர்.
எனினும் சுதாரித்துகொண்ட மஞ்சுளா தாலிச்செயினின் ஒருபகுதியை கெட்டியாக புடித்துகொண்டார். ஆனால் கல் நெஞ்சம் கொண்ட அந்த இளைஞர் பெண்ணின் தாலிச்செயினை விடாமல் பிடித்துகொண்டார். இதனால் மஞ்சுளா சுமார் 10 மீட்டர் தூரம் சாலையில் தர தரவென இழுத்து செல்லப்பட்டார். துவாரகாந்த் பின்னால் சென்று விரட்டி பிடிக்க முயன்றார். எனினும் அதற்குள் தாலிச்செயின் இரண்டாக உடைந்தது.
இதையடுத்து அந்த நபர்கள் தாலிச்செயினின் பாதியோடு பைக்கில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் மஞ்சுளா படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் முன்பு மஞ்சுளாவும் அவரது கணவரும் பைக்கில் இருந்து இறங்குகின்றனர்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் மஞ்சுளாவின் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்து செல்கின்றனர். மஞ்சுளா தாலிச்சங்கிலியை கெட்டியாக பிடித்துகொண்டிருந்ததால் சாலையில் தரதரவென இழுத்துச்செலப்படுவது போல் வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மார்க்கெட்டில் வைத்தே நோட்டமிட்டு தொடர்ந்து பின்னால் விரட்டி வந்து தாலிச்செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதேபோல் அதே பகுதியில் திறந்து கிடந்த வீட்டில் நுழைந்து சிறுவர்கள் 2 பேர் ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்ற சம்பவும் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி விடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
இதில், மதுரை திருமலைநாயக்கர் மகால் பந்தடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென இரண்டு சிறுவர்கள் நுழைந்தனர். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த 2 சிறுவர்களும் ஏதா அவர்களுடைய வீட்டுக்கு செல்வது போல சர்வ சாதாரணமாக விளையாடிக்கொண்டே செல்வது போல் உள்ளே செல்கின்றனர். அங்கு வீட்டின் உரிமையாளர்கள் டிவி பார்த்துக்கொண்டிருக்கினர். இதற்கிடையே இந்த 2 சிறுவர்களும் வீட்டிற்குள் சென்று விட்டு அங்கிருந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தான் சிறுவர்கள் வீட்டில் இருந்து பர்சை தூக்கி சென்றதும், அதில் ரூ.3 ஆயிரம் பணம் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. பண்டிகை காலங்களில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாகவும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications