அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!
மதுரை : மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன் என்பவர், அவரது மனைவி மாலதி, மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் மூத்தவர் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளையவர் சிவசங்கர் தேனி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
உஷார்.. அடுத்த 3 மணிநேரம் கவனம்.. 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - வானிலை மையம்
பெண் மரணம்
கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி நவ.8 அன்று காலை உயிரிழந்துள்ளார். பின், மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.
3 நாட்கள் தாமதம்
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்த போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், மீண்டும் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் வந்து போலீசார் எச்சரித்தனர்.
தற்கொலை மிரட்டல்
மேலும் மாலதியின் உடலை காவலர்கள் எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்ட பொழுது தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் எச்சரித்ததால், பாலகிருஷ்ணன் மாலதியின் உடலை சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு அவரது குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர்.
ஜெபம்
போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.