சட்டக்கல்வியை முறையாக பயிலாமல் வழக்கறிஞர்களாகின்றனர்.. தலைமை நீதிபதி பரபரப்பு பேச்சு!
மதுரை: வழக்கறிஞர் தொழில் எளிதானது அல்ல; இதில் வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் நலநிதி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கலந்து கொண்டார். அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வழங்கிய ரூ.10.50 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
இதனை அறங்காவலர்கள் ஆர்.காந்தி, ஆறுமுகம் ஆகியோரிடம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கூறியதாவது:-

நேர்மை அவசியம்
வழக்கறிஞர் தொழில் எளிதானது அல்ல. எளிதாக தங்கப் புதையல் கிடைக்கும் தொழில் வழக்கறிஞர் தொழில் அல்ல. இதில் வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம். இந்தியாவில் சுமார் 2,800 சட்டக் கல்லூரிகள் உள்ளன. சமீபத்தில் சட்டக் கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாக வருகின்றனர். சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.

ஏற்றத்தாழ்வுகள் மறையும்
கல்வி ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். பட்டப் படிப்பு என்பது பெயருக்குப் பின்னால் மட்டும் குறிப்பிடுவதற்காக இருக்கக் கூடாது. கல்வி உண்மையான சமூக மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறையும். நீதித்துறை என்பது நீதிபதியை மட்டும் சார்ந்தது அல்ல.

நீதித்துறை என்பது என்ன?
வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்ததுதான் நீதித்துறை. நீதி வழங்குவது என்பது இறைப் பணி அல்ல. அது மற்ற அரசுப் பணிகளை போலவே சமூகக் கடமைகளை நிறைவேற்றும் ஒரு பணியாகும். இறைப் பணியை இறைவனைத் தவிர வேறு யாராலும் மேற்கொள்ள முடியாது. பொதுப் பணியில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கூறினார்.

பாராட்டி பேசினார்
மேலும், அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய நீதிபதி புகழேந்தி, மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், வீராகதிரவன், வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, கு.சாமிதுரை, லஜபதிராய் உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகளை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பாராட்டி பேசினார். இந்த விழாவில், உயிரிழந்த வழக்கறிஞர்கள் சிவகுமார், அன்பு சரவணன் குடும்பத்துக்கு பண உதவியும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications