நெய்யில் மாட்டுக் கொழுப்பு? ஏஆர் டெய்ரி நெய் தயாரிக்க தொடரும் தடை! அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்!
மதுரை: திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க வழங்கிய நெய்யில் கலப்படம் செய்ததாக சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது எனவும், அதே நேரத்தில் பால் விற்பனை பதப்படுத்துதல் செய்வதை தொடரலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனு குறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிலைய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி நிறுவனம் சார்பில் ஆர்.ராஜதர்ஷினி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், எங்கள் நிறுவனம் 1995 முதல் நெய், வெண்ணெய் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி தொழில் செய்து வருகிறோம்.
திருப்பதி தேவஸ்தானத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் கடந்தாண்டு மார்ச் மாதம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 6.6.2024 முதல் 30.10.2024 வரை 10 லட்சம் கிலோ நெய் அனுப்பினோம். திருப்பதி லட்டு தயாரிக்க எங்கள் நிறுவனம் மட்டும் இல்லாமல் வேறு நான்கு நிறுவனங்களிடம் இருந்தும் நெய் வாங்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து எங்கள் நிறுவனம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கியது. குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் கண்டறியபட்டுள்ளது. இதையடுத்து எங்கள் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? நிறுவனத்தை கருப்பு பட்டியலில் ஏன் சேர்க்கக் கூடாது? என விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு உரிய விளக்கம் அளித்தோம். பின்னர் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் எந்த கலப்படமும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயடு கடந்தாண்டு செப். 15-ல் நூறு நாள் வெற்றிப் பேரணியில் முந்தைய அரசின் திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் பிராணிகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. குஜராத் நிறுவனத்தின் நெய் மாதிரி ஆய்வு அறிக்கை அடிப்படையில் இக்குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் எங்கள் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து எப்எஸ்எஸ்ஏஐ மத்திய உரிமம் வழங்கும் அலுவலர் 14.2.2025-ல் உத்தரவிட்டுள்ளார். நெய் விநியோகத்தில் தான் பிரச்சினை. எங்கள் நிறுவனம் பால்கோவா, வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இப்பொருட்களில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும் போது மொத்த வர்த்தகத்தையும் நிறுத்துவது சட்டவிரோதம். எங்கள் நிறுவனத்தில் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெருமளவு கடன் பெற்றுள்ளோம். எனவே நெய் தவிர்த்து பிறகு பொருட்கள் வர்த்தகத்துக்கான உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது. அதே நேரத்தில் பால் பதப்படுத்துதல், விற்பனை செய்வதை தொடரலாம் என உத்தரவிட்டு,
இது குறித்து ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு தர நிலைய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications