ஹெல்மெட் போட்டிருந்தா நாங்க ‘கூல்ட்ரிங்ஸ்’ தருவோம்.. வித்தியாசமாக விழிப்புணர்வு- இது எங்கே தெரியுமா?
மதுரை : போக்குவரத்து விதிகளை பின்பற்றி, முறையாக தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் டிராஃபிக் போலீசார் அவர்களுக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் தொப்பிகளை வழங்கினர்.
Recommended Video
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாகவும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், விமானநிலையம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவுரை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கோடைகாலத்தையொட்டி குளிர்பானங்கள் மற்றும் தொப்பிகளை டிராஃபிக் போலீசார் வழங்கினர்.