தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறல்! அம்மா கையிலேயே உயிரிழந்த 8 மாத குழந்தை! மதுரையில் சோகம்
மதுரை: எட்டு மாத குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் அந்த தாய்க்குத் தனது கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் தாய்க்கும் பிள்ளைக்குமான உறவை வலுவானது. குழந்தையைப் பாதுகாப்பது தான் எப்போதும் தாய்க்கு உள்ளுணர்விலேயே முதன்மையானதாக இருக்கும். இதன் காரணமாகவே எந்தவொரு இக்கட்டான சூழல் என்றாலும் குழந்தைக்கே தாய் முக்கியம் கொடுப்பார். ஆனால், அதையும் கூட தாண்டி சில சமயம் எதிர்பாராத விபத்துகள் நடந்துவிடும்.

மோசமான சம்பவம்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் மதுரையில் நடந்துள்ளது. அங்குப் பெண் ஒருவர் தனது 8 மாத குழந்தை தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த தாய் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடிச் சென்றுள்ளார். இருப்பினும், அதற்குள் குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மதுரை தம்பதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் விநாயக். இவரது மனைவி கண்மணியை இந்த ஜோடிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கண்மணி கருவுற்ற நிலையில், அவருக்கு 1.5 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அந்த குழந்தை பிறந்த அன்றே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் விநாயக்- கண்மணி தம்பதி பெரும் சோகத்தில் இருந்தனர்.
இருப்பினும், கண்மணி உடனடியாக கருவுற்றார். இதனால் அந்த தம்பதி சற்று நிம்மதி அடைந்தனர். எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த தம்பதிக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் ஒரு மாதத்தில் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு அந்த பெண் சென்றுள்ளார். பெற்றோரும் உடன் இருக்கவே எல்லாரும் சேர்ந்து குழந்தையைக் கவனித்து வந்துள்ளனர்.
மூச்சுத்திணறல்
இதற்கிடையே நேற்று குழந்தைக்குக் கண்மணி வழக்கம் போலத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்தவுடன் பதறிய கண்மணி குடும்பத்தினருக்கு இது குறித்துச் சொல்லியுள்ளார். உடனடியாக அவர்கள் குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருப்பினும், அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் உசிலம்பட்டி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications