எடப்பாடி பழனிசாமிக்கு இதனால் தான் பயம்.. ஓபிஎஸ் எங்க இருக்காருனே தெரியலையே.. டிடிவி தினகரன் சுளீர்!
துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம், அதனால் தான் சேர்க்கமாட்டேன் என்கிறார் எடப்பாடி பழனிசாமி எனக் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
மதுரை : ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையே எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "திமுக ஆட்சிக்கு வந்ததற்கு, எடப்பாடி பழனிசாமியே காரணம். எடப்பாடி பழனிசாமியின், செயல்படுத்த முடியாத வாக்குறுதியால் தான் அதிமுக ஆட்சியை இழந்தது. இப்போது எடப்பாடிக்கு தற்காலிக வெற்றியே கிடைத்துள்ளது. துரோகிகள் கைகளில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் சின்னம் பலவீனம் அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோதே லட்சியத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அமமுக. ஆனால் இன்று வியாபார நோக்கோடு லாபத்திற்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கின்றனர்.

குப்பனோ சுப்பனோ
ஜெயலலிதாவின் தொண்டர்களாக நாம் அனைவரும் ஓர் அணியில் செயல்பட்டால் தான் நாடாளுமன்றத்தில் அதிமுக வெல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி வகித்தாலும், அதிமுக ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், குப்பனோ சுப்பனோ கூட நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்த முடியும். இதில் பழனிசாமிக்கு எந்தப் பெருமையும் இல்லை. மத்திய பாஜக அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் அவர் நடத்தினார்.

ஆணவம் + பணத் திமிர்
இரட்டை இலை சின்னம் இருந்தும் நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு பழனிசாமியின் ஆணவமும், பணத் திமிரும் தான் காரணம். ஜெயலலிதா ஆட்சியை, அவரால் தக்க வைக்க முடியவில்லை. வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்கவே முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குக் கூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியவில்லை.

பழனிசாமி ஆட்டம்
எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தேமுதிக, பாமக வெளியேறிவிட்டது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5% அறிவித்து முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் ஏமாற்றிவிட்டார், பாமக பழனிசாமியிடம் இருந்து நல்லவேளையாக தப்பித்துவிட்டனர். ஒரு கண்ணில் வெண்ணைய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். ஆட்சி அதிகார அகங்காரத்தால் பணத்தால் பழனிசாமி ஆட்டம் போடுகிறார்.

இந்த ரவுண்டு
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்றுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர், தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால் அது பின்னடைவைச் சந்தித்துள்ளது. பழனிசாமி எப்போதும் திருந்துவதாக தெரியவதில்லை, நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம். தேர்தல் ஆணையம் போகலாம். கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு மூலம் தற்காலிகமான தீர்வு தான் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.

துரோகம் செய்ததால் அச்சம்
கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார். பணபலமும், மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல; டெண்டர்கள். துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம் அதனால் தான் சேர்க்கமாட்டேன் என்கிறார் பழனிசாமி. திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்." எனத் தெரிவித்தார்.

எங்க இருக்கார்னே தெரியலையே
நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தலைமையில் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், "எனது உயரம் எனக்கு தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி இருக்காது." எனத் தெரிவித்தார். தொடர்ந்து, இன்று மாலை தேனி செல்லும் தினகரனிடம், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், இல்லை, அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையே என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications