சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார்.. 10ம் இடத்தில் உதயநிதி.. செல்லூர் ராஜூ விமர்சனம்!
மதுரை: திமுகவில் சீனியர் அமைச்சர்கள் ஏராளமானோர் இருந்தும், அனைவரையும் உதயநிதி ஸ்டாலின் பின்னுக்கு தள்ளிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். அதேபோல், காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் தன் மகனை முதலமைச்சர் புகழ்ந்து பேசி வருவதாகவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், எம்ஜிஆர் மறைந்து 36 ஆண்டுகள் கடந்தாலும், அவர் பெயரை சொல்லாமல் தமிழ்நாட்டில் யாராலும் அரசியல் செய்ய முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட, எம்ஜிஆரை சித்தப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது.

எம்ஜிஆர்
ஆனால் எம்ஜிஆரை சித்தாப்பா என்று சொல்வதே மக்களை ஏமாற்றும் ஒரு வழிதான். ஆனால் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய வேண்டும் என்றால், எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். கருணாநிதி பெயரை சொல்லி அரசியல் செய்ய முடியுமா? கப்பக்கிழங்கையும், பலாக்கொட்டையையும் சாப்பிட வைத்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டிற்கான உரிமையை பெற்றுத்தராத ஆட்சி திமுக. நல்ல நல்ல கருத்துக்களை தன் படங்கள் மூலம் மக்களுக்கு சொன்னவர் எம்ஜிஆர். அவர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அதிமுக யாரின் வாரிசு
அதிமுகவினர் யாருடைய வாரிசு? யாரும் நடிகர் விஜயின் வாரிசு என்று சொல்லிவிடாதீர்கள். நாம் அனைவரும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் வாரிசுகள். அரிதாரம் பூசியவன், நடிகன் என்று எம்ஜிஆரை கேலி பேசினாலும், கேலி பேசியவர்கள் குடும்பத்தையும் வாழ வைத்தவர் எம்ஜிஆர். அரசியலில் தங்களின் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள். ஆனால் கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தியவர். மக்களை தான் தன் வாரிசுகளாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நினைத்தனர்.

நீட் விவகாரம்
ஜெயலலிதா போல் உத்தரப் பிரதேச முதலமைச்சர் கூட மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக சொன்னார். ஆனால் அவரால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை. ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த எடப்பாடி பழனிசாமி, அவரின் மறைவுக்கு பின் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார். தற்போது திமுகவினர் பொய் மூட்டைகளை சட்டசபையிலும், பொதுக்கூட்டங்களிலும் கூறி வருகிறார்கள். மத்தியில் திமுக கூட்டணியில் இருந்த போது நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டுவிட்டு, நீட்டை வரவேற்று பேசிவிட்டு, கூட்டணியில் உள்ள ப.சிதம்பரத்தின் மனைவி வாதாடி நீட்டை கொண்டு வந்து நுழைத்துவிட்டார்கள்.

10வது இடத்தில் உதயநிதி
திமுகவில் 35 பேர் அமைச்சர்களாக இருந்தாலும், 10வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். என் மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என்று சொன்னர் மு.க.ஸ்டாலின். அதேபோல், கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என்று கேட்டவர் உதயநிதி. ஆனால் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அதேபோல் நம்பர் ஒன் முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால் எதில் நம்பர் ஒன் என்று தெரியவில்லை. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் தன் மகனை முதலமைச்சர் புகழ்ந்து பேசி வருகிறார்.

சரித்திரம் இல்லை
இடதுசாரிகள், திருமாவளவன், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் என அனைவருக்கும் திமுக ஆட்சியில் பூட்டு போட்டுவிட்டார்கள். அமைச்சர்களில் 27வது இடத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். வெளிநாட்டில் படித்து 4 கம்பெனிகளை பார்த்த அவரையே, பின்னுக்கு தள்ளி 10 இடத்தில் உதயநிதி ஸ்டாலினை வைத்துள்ளனர். மதுரையில் இரு அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்த திமுக மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதனை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications