கல்விக் கடன் ரத்து? - சு.வெங்கடேசனின் கோரிக்கைக்கு மத்திய அரசு சொன்ன “நம்பிக்கை வார்த்தைகள்”!
மதுரை : உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களின் கல்விக் கடன் ரத்து பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டதன் காரணமாக படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அந்த மாணவர்கள் தங்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டதால், அவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வந்தார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன் கோரிக்கை
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்களில் பெரும்பாலோனோர் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பங்களை சார்ந்தவர்கள் என்றும், அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரியும் கடந்த மார்ச் மாதம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் பதில் அளித்துள்ளார்.

22,500 பேர்
மத்திய இணையமைச்சர் எழுதியுள்ள பதில் கடிதத்தில், "வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22,500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள், பிப்ரவரி 1, 2022 க்கு பிறகு உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனில் இருந்து மேலை நாடுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்களுக்கு தங்குமிடம், மருத்துவம், உணவு உள்ளிட்ட எல்லா உதவிகளையும் அரசு செய்து "ஆபரேசன் கங்கா" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஆலோசனை
இன்னும் உக்ரைன் நிலைமைகள் தெளிவாகவில்லை. அங்கு நடந்தேறி வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு நிலைமை சீர் அடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளையும் பரிசீலிப்போம். இடைக்கால நடவடிக்கையாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மீது உக்ரைன் மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய மட்டங்களில் கலந்தாலோசனை செய்யுமாறு இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

உடனடி தீர்வு வேண்டும்
இந்த பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி, "கடிதத்தின் பதிலில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்று உளமாற விரும்பினாலும் அதை கல்விக் கடன் ரத்து குறித்த பிரச்சினையோடு இணைக்காமல், ஏற்கெனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குகிற முடிவை உடன் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications