வைகை அணையில் தண்ணீர் திறப்பு.. விநாடிக்கு 900 க.அடி.. மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை: மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் முழுவதும் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதேபோல் முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

சமீபத்தில் பெய்த மழையால் தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடி நிரம்பியுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து உள்ளது. இதையடுத்து, வைகை அணையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வைகை அணையில் இருந்து பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியில் ஜூன் 15 முதல் அக்டோபர் 12 வரை தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அறிவித்தது.
அதன்படி இன்று (ஜூன் 15) காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, வாடிப்பட்டி வட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையின் தண்ணீர் இருப்பு, வரத்தை பொறுத்து வினாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்கள் முழுமையாகவும், 75 நாட்கள் முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications