விடாது பெய்யும் கனமழை- கரைபுரண்டோடும் வைகை... பொதுமக்களுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை: வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு இறக்கவோ வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வைகை அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே 1 மாத காலமாக 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வருஷநாடு, மூல வைகை பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.
கொட்டக்குடி, சுருளியாறு, பாம்பனாறு என வைகையின் துணை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

வைகை நதியில் வெள்ளம்
மதுரை, தேனி மாவட்டங்களும் மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553 கன அடியாக உள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் 66.83 அடியாகவும் உள்ளது. ஒரே ஆண்டில் வைகை அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டுவதால் அப்பகுதிகளின் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையில் இரு கரைகளை ஆரத்தழுவும் வைகை
இன்று காலை வைகை அணையில் இருந்து 569 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மதுரை மாநகரில் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வைகை நதி ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. மதுரை யானைக்கல் தரைப்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பால பகுதிகளில் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, அதன் கரையோரப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக இறக்கவோ கூடாது எனவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

2 பேர் உயிரிழப்பு
இதனிடையே மதுரை மாவட்டம் பரவை அருகே நேற்று வைகை ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். திருப்பூரை சேர்ந்த இரு இளைஞர்கள், பரவையில் திருவிழாவுக்காக வந்திருந்தனர். அப்போது வைகை நதியில் குளிக்க சென்ற நிலையில் மாயமகினர். இந்த இளைஞர்களை தேடும் பணி இன்று 2-வது நாளாக நீடித்தது. பல மணிநேர தேடுதலுக்குப் பின்னர் 2 இளைஞர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.












Click it and Unblock the Notifications