பட்டியலின மக்கள் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு..கண்டம் துண்டமாக வெட்டப்பட்ட கொடூரம்!கொந்தளித்த விசிக
மதுரை: மதுரையில் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மாடு, ஆதிக்க சமூகத்தினரின் நிலத்தில் மேய்ந்ததால் அதை சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இதற்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தலித் சமூத்தை சேர்ந்தவர்கள் குல தெய்வ கோயிலுக்கு மாடு ஒன்றை நேர்ந்து விட்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மாடு காணவில்லை. மாட்டை தேடி சென்ற மக்கள், மாடு மாற்று சமூகத்தினரின் நிலத்தில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே மாடு தங்களது நிலத்தில் மேய்வதாக இரு சமூகத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இந்த மாடு மாற்று சமூகத்தினரால்தான் வெட்டப்பட்டிருப்பதாக கூறி தலித் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் போலீஸ் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, "மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கொட்டாம்பட்டி ஒன்றியம், பால்குடியில் தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் நொண்டிச்சாமி கோவிலுக்கு மாடு ஒன்றை நேர்ந்து விட்டுள்ளனர். காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை, அம்மாசி உள்ளிட்ட சிலர் 'பறப்பயலுக மாடு எங்க காட்டுல எப்படிடா மேயலாம்' என சாதி வெறியோடு அரிவாளால் மாறி மாறி வெட்டியுள்ளனர்.

இது குறித்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் மதிராஜா அவர்களின் அனுமதியின்றி 'பறையன்' என்ற வார்த்தையை பேனாவால் அடித்து, கொட்டாம்பட்டி காவலர் சாதிய நோக்கிலும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளனர். இதுவரை கோவில் மாட்டை வெட்டிய சாதி வெறியர்கள் கைது செய்யப்படவில்லை. சாதி வெறியர்களை பாதுகாக்கும் காவல்துறையினரால் அப்பகுதியில் பெரும் அச்சமே மேலிடுகிறது" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் விசிக சார்பில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கட்சியினர் கூறியுள்ளனர். கோயிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட மாடு மாற்று சமூகத்தினரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலூரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications