கஷ்டப்பட்டு உழைச்சு வருமான வரி கட்டுறோம்.. சலுகை அறிவிச்சா நல்லா இருக்கும்! விஜய் சேதுபதி வேண்டுகோள்
மதுரை: வருமான வரியை நேர்மையாக செலுத்துபவர்களுக்கு ஏதேனும் சலுகை இருந்தால் நல்லது எனவும், உழைத்து சம்பாதிக்கின்ற காலங்களில் நேர்மையாக தங்களது வருமானத்திற்குரிய வரியை செலுத்துகின்ற நபர்களுக்கு பிற்காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் சலுகைகளை வருமான வரித்துறை அறிவித்தால் நன்றாக இருக்கும் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
வருமான வரித்துறை சார்பில் இன்று மதுரையில் Tax Payers Hub நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். '

அப்போது பேசிய அவர், வருமான வரித்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் தங்கள் தேவையின் பொருட்டு யாரை சந்திக்க வேண்டும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து விவரமான குழந்தைகளுக்கு கூட புரியும் வகையில் கார்ட்டூன் வடிவத்தில் வருமானவரித் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
ஏனென்றால் இது போன்ற சிரமங்களை நான் பெரிதும் அனுபவித்தவன். மேலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. அதனை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் வெளியிட்டால் எல்லோரும் பயனடைவார்கள். ஏனென்றால் வருமான வரித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். அந்த அடிப்படையில் இந்த கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்.
இங்கு ஒரு விஷயம் பரபரப்பானதற்கு பிறகுதான் அது குறித்து நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம். ஆகையால் அதனை முன்கூட்டியே எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் செய்து விட்டால் சிறப்பாக இருக்கும். நமது உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் எப்படி கோரிக்கைகளை வைக்கின்றோமோ அதே போன்று நம்முடைய வரிகளை தவறாமல் அரசாங்கத்திற்கு கட்டுவதும் கடமை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
அதேபோல அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கான வருமான வரியை கட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் பயன் தரும் வகையில் சலுகைகள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். வருமான வரியை தவறாமல் கட்டிய நபர் பிற்காலத்தில் ஏதேனும் இயலாமல் போகுமானால் அவரை கைவிடாது காப்பாற்றுகின்ற நடைமுறையும் அவசியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்." எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications