முதல்வர் ஸ்டாலின் வாரிசு அரசியலால் இந்த இடத்திற்கு வரவில்லை.. மதுரையில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம்!
மதுரை : முதலமைச்சர் ஸ்டாலின் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என்று தோன்றுகிறது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் திடலில் முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி கடந்த 19ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் புகைப்படக் கண்காட்சியை நடிகர் விஜய் சேதுபதி பார்வையிட்டார். அவரை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று, புகைப்படங்களின் காலகட்டம் பற்றி விளக்கினார்.

விஜய் சேதுபதி
மதுரை பகுதியில் படப்பிடிப்புக்காக வந்துள்ள விஜய் சேதுபதி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் அவரது சிறு வயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களைக் கொண்ட புகைப்பட்டக் கண்காட்சியைப் பார்வையிட்டார். தொடர்ந்து மிசா காலகட்டத்தில் சிறையில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கையும் பார்வையிட்டார்.

உலகத்திலேயே முதன்முதலாக
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "புகைப்படங்கள், மிசா சிறைச்சாலை வடிவமைப்பு உள்ளிட்டவை மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நமது வரலாறு என்பது நம்மை யார் ஆண்டார்கள், யார் ஆள்கிறார்கள் என்பதில் இருக்கிறது. எனவே அவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது எல்லோருக்கும் அவசியம். உலகத்திலேயே திமுகவில் தான் முதன்முதலாக இளைஞரணி தொடங்கப்பட்டது என்ற விபரத்தை தெரிந்து கொண்டேன்.

வாரிசு அரசியலா
திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பாலங்கள் கட்டியது, பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இருந்த காட்சிகள் ஈர்க்கும் வகையில் இருந்தது. எனக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. இந்த புகைப்படக் கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என்று தோன்றுகிறது" என்றார். அரசின் செயல்பாடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "நான் அரசியலுக்கு வந்தால் இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்வேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.

ரோகிணி தியேட்டர் விவகாரம்
மேலும், சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, "எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதையும், நசுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications