டாஸ்மாக்கை திறந்து வச்சதாலதான்.. அந்த குழந்தையை கொளுத்திட்டாங்க.. திறக்காதீங்க.. நந்தினி ஆவேசம்
மதுக்கடைகளை திறக்க கூடாது என்று நந்தினி உண்ணாவிரத போராட்டம் செய்தார்
மதுரை: "சாராய கடையை திறக்காதீங்க.. மூடுனா மூடினதுதான்.. திறந்தீங்கன்னா மக்களே அடிச்சி நொறுக்குவாங்க.. அதனாலதான் அந்த குழந்தையை உயிரோடு கொளுத்திட்டாங்க" என்று வழக்கறிஞர் நந்தினியும், அவரது தந்தையும் முழக்கமிட்டு போராட்டம் செய்தனர்.
விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை மக்கள் மனசை தொடர்ந்து பாதித்து வருகிறது.. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பினும், ஒரு குழந்தையை உயிரோடு எரித்தது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்ததாக அதிமுக நிர்வாகிகள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது.. இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களுமே கோரிக்கை விடுத்தனர்.
இதில் விஜயகாந்த் ஒரு படிமேலபோய், அவர்கள் 2 பேருக்கும் தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று ஆவேசமானார்.. இதே கோரிக்கையை வலியுறுத்திதான் சமூக ஆர்வலர் நந்தினியும், அவரது தந்தையும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் சம்பவத்தை பொறுத்தவரை கொலையாளிகள் 2 பேருமே குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் இந்த படுகொலை சம்பவம் நடந்தது தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்ட 2வது நாளில் என்பதால், மதுக்கடைகளுக்கு எதிராகவும் கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
ஆத்திகுளம் காந்திபுரம் பகுதியில் நந்தினியின் வீடு உள்ளது.. இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக ஏற்கனவே அவர் அறிவித்தும் இருந்தார்... அதனால் அவரது வீட்டு முன்பு இன்று அதிகாலையிலிருந்தே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டம் நடத்துவதற்காக மதுரை ஹைகோர்ட் கிளைக்கு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் கிளம்பி வந்தனர்.. அப்போது இருவரையும், போலீசார் வீட்டின் முன்பே கைது செய்தனர்.
அப்போது, அவர்கள், ""சாராய கடையை திறக்காதீங்க.. மூடுனா மூடினதுதான்.. திறந்தீங்கன்னா மக்களே அடிச்சி நொறுக்குவாங்க.. அதனாலதான் அந்த குழந்தையை உயிரோடு கொளுத்திட்டாங்க... அந்த 2 பேர் மேலயும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. தூக்கு தண்டனை தந்துடுங்க.. சாராய கடையை மட்டும் திறந்திடாதீங்க.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட வழக்கை வாபஸ் வாங்குங்க" என்று ஆவேச கோஷமிட்டனர்.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications