அழகிரியின் அடுத்த திட்டம் என்ன...பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா ?
மதுரை : மு.க.அழகிரியின் அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்ல, திமுக.,வினரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனசர். சமீபத்தில் தொண்டர்களிடையே அழகிரி பேசிய பேச்சே இந்த ஆர்வம் ஏற்படக் காரணம்.
முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி, திமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியாக இருந்து வந்தார். ஆனால் அவ்வப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அவரது பிறந்த நாளான ஜனவரி 30 அன்று முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியிடப்படுமா என்ற கேள்வியும், ஆர்வமும் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தீவிர பிரச்சாரத்தில் ஸ்டாலின், கனிமொழி :
விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பெயரில் திமுக சார்பில் பல இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி., கனிமொழி ஆகியோர் பங்கேற்று பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் மத்திய மற்றும் தமிழக அரசுகளை இருவரும் கடுமையாக தாக்கி விமர்சித்து, பிரச்சாரம் செய்வதுடன், அடுத்த 3 மாதங்களில் திமுக ஆட்சி அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
நான் விட மாட்டேன் :
இதற்கிடையில் ஜனவரி 4 ம் தேதியன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார். பிறகு தொண்டர்களிடையே பேசிய அவர், ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது; திமுக ஆட்சி அமைய எனது தொண்டர்கள் விட மாட்டார்கள். விரைவில் நல்ல முடிவை அறிப்பேன் என பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியது.
புதிய கட்சி தொடங்குவாரா :
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என அழகிரி கூறுவதற்கு முன்னரே அவரது அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் எனப் பலவிதமாக யூகங்கள் உலா வர துவங்கி விட்டன. ரஜினி கட்சி துவங்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்தது, ரஜினி கட்சியில் அழகிரி இணைந்து, திமுக.,வை எதிர்ப்பார் என ஒரு தகவல் பரவியது. பிறகு, அவர் புதிய கட்சி தொடங்க உள்ளார். அதற்கு கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கப்பட உள்ளது என கூறப்பட்டது. பிறகு அழகிரி பாஜக.,வில் இணைய உள்ளதால் என கூறப்பட்டது.
அழகிரியை எதிர்பார்க்கும் அதிமுக :
திமுக.,வை சமாளிக்கவும், திமுக.,வின் தேர்தல் வியூகங்களை உடைக்கவும், அழகிரியின் அடுத்த திட்டம் என்ன என்பதை அறிய திமுக.,வினரை விட அதிமுக.,வினர் அதிக ஆர்வமாக உள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே அமைச்சர்கள் பலர், அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக உடையும் என கூறி வருகின்றனர். இதனால் பிறந்த நாளன்று அழகிரி வெளியிட உள்ள அறிவிப்பிற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
ஸ்டாலின் பயணத்திற்கு இது காரணமா :
பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கி விட்ட ஸ்டாலின் சமீபத்தில் கோபாலபுரத்தில் திடீரென செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார். அதில், ஜனவரி 29 முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து, மக்களிடம் குறைகளை கேட்க போகிறேன் என அறிவித்தார். ஜனவரி 30 அழகிரியின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் அவர் முக்கிய அறிவிப்பை ஏதாவது வெளியிடுவார் என யூகித்து தான், அதற்கு முந்தைய தினமே 234 தொகுதிகளுக்கும் பயணம் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரோ என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.