ஜல்லிக்கட்டு போட்டியில் பலியான வீரர் குடும்பத்தினருக்கு அரசு வேலை? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
மதுரை : ஜல்லக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து போட்டியை ரசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதனைத் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இறந்து போன ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை குறித்த கேள்விக்கு அது குறித்து தமிழக முதல்வர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பரிசு வழங்கிய உதயநிதி
ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.மூர்த்தி , பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் விழா மேடையில் இருந்து ஜல்லிக்கட்டு நிகழ்வை கண்டு ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை உதயநிதி ஸ்டாலினோடு நடிகர் சூரியும் இணைந்து கண்டுகளித்தார். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அதேபோல், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உதயநிதி பேச்சு
இந்நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருடா வருடம் வருவது வழக்கம். அதேபோல இந்த வருடமும் வந்துள்ளேன். இப்போது அமைச்சராக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அதிகமான வீரர்கள் வந்துள்ளார்கள். ஏராளமான காளைகள் பங்கு கொண்டுள்ளன. பரிசுகள் கொடுத்துக் கொண்டுள்ளோம். அவசரமாக வேறு ஒரு வேலை உள்ளதால் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

அரசு வேலை
உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனை முதல்வரிடம் சொல்லி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம். மதுரை பாலமேடு ஜல்லக்கட்டில் இறந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.

வீரர்கள் உயிரிழப்பு
நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான நிலையில், திருச்சி அருகே சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஒருவர் பலியானார். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ,.3 லட்சம் நிதி வழங்கப்படும என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications