மீண்டும் ஷாக்! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்.. மதுரை அருகே இளைஞர் வெறிச்செயல்!
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இளம்பெண் மீது இளைஞர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தச் சம்பவம் மதுரையை அதிர வைத்துள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் இளம்பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா என்பவர் தாக்கியுள்ளார். காதலிக்க வற்புறுத்தி அந்தப் பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஒரு இளைஞர், ஜெராக்ஸ் கடைக்கு வந்து, அந்த இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமடைந்து, அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளியின் உள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications