ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து மே.வங்க அமைச்சர் விமர்சனம்- பகிரங்க மன்னிப்பு கோரினார் மமதா பானர்ஜி!
கொல்கத்தா: ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி விமர்சனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் சுவேந்து அதிகாரி. முன்னர் மமதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர் சுவேந்து அதிகாரி. பின்னர் மமதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜகவுக்கு தாவினார்.

நந்தி கிராம் சுவேந்து அதிகாரி
கடந்த சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜியை எதிர்த்து நந்தி கிராமில் போட்டியிட்டார் சுவேந்து அதிகாரி. இத்தொகுதியில் தொடக்கத்தில் மமதா பானர்ஜி முன்னிலை வகித்தார். ஆனால் திடீரென 1956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக மமதா பானர்ஜி வழக்கும் தொடர்ந்துள்ளார்.

கிண்டலடித்த அமைச்சர் அகில் கிரி
திரிணாமுல் காங்கிரஸின் பரம வைரியாக இருப்பவர்தான் சுவேந்து அதிகாரி. அவரது நந்தி கிராம் தொகுதியில் அமைச்சர் அகில் கிரி சுற்றுப் பயணம் செய்தார். அப்போது என்னுடைய தோற்றத்தை சுவேந்து அதிகாரி கிண்டலடித்துள்ளார். நீங்கள் அழகானவர்தான்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது யாரையும் அழகை வைத்து உருவத்தை வைத்து எடை போடுகிற பழக்கம் இல்லை. ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் உங்களது ஜனாதிபதி திரவுபதி முர்மு எப்படி தோற்றமளிக்கிறார்? என பாருங்கள் என பதிலுக்கு கிண்டலாக பேசியிருந்தார்.

கொந்தளித்த ஒடிஷாவும் பாஜகவும்
மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அமைச்சர் அகில் கிரிக்கு எதிராக மேற்கு வங்கம், ஒடிஷாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ஒடிஷா மாநிலத்தின் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இதனால் ஒடிஷாவில் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. இதனால் மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும் பாஜகவினர் அமைதியாகவில்லை.

மன்னிப்பு கேட்ட மமதா
இந்நிலையில் மமதா பானர்ஜி, அகில் கிரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். அகில் கிரியின் பேச்சை ஏற்க முடியாது; அவரது பேச்சை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளது. அமைச்சர் அகில் கிரியின் செயல் தவறானது. அவர் என்னுடைய கட்சியை சேர்ந்தவர்; ஆகையால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என மமதா பானர்ஜி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications