ஆப்கனில் இருந்து மும்பைக்கு...ரூ. 1000 கோடி கடத்தல் போதைப்பொருள் பறிமுதல்...இருவர் கைது!!
மும்பை: ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட ரூ. 1000 கோடி மதிப்பிலான 191 கிலோ எடையிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நவிமும்பையில் இருக்கும் ஹவா ஷேவா துறைமுகத்தில் இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருட்களை பிளாஸ்டிக் பைப்பில் வைத்து சுருட்டிக் கொண்டு வந்துள்ளனர். இது போதைப்பொருள் என்று தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மூங்கில் போன்ற தோற்றத்தில் பெயின்ட் அடித்துள்ளனர். மேலும் இது ஆயுர்வேத மருந்து என்றும் ஏமாற்ற முயற்சித்துள்ளனர்.

போதைபொருட்கள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சுங்கத்துறை முகவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடத்தி வருவதற்கு நிதி கொடுத்தவர் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எம்பி ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூசன் நிறுவனத்தைச் சேர்ந்த சுங்கத்துறை முகவர் மீனாநாத் போடாகே மற்றும் மும்ப்ராவைச் சேர்ந்த கொண்டிபாவ் பாண்டுரங் குஞ்சால் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கும் முன்பு இவர்கள் இதேபோன்று போதைப்பொருட்களை கடத்தி வந்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வைத்துள்ளது. மும்பையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் இதுதான் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பஞ்சாபில் இருக்கும் அமிர்தசரஸில் 194 கிலோ எடையிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

உலகிலேயே 2001ல் இருந்து போதைப்பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஆப்கானிஸ்தான் முன்னணியில் உள்ளது. உலகிலேயே 90 சதவீத ஓபியம் ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிருந்து 95 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சுங்கம் மற்றும் வருமான புலனாய்வு இயக்குநரகம் இந்த பறிமுதலை சனிக்கிழமை இரவு மேற்கொண்டு இருந்தது. ஆவணங்களை சோதித்துப் பார்த்ததில், கடத்தி வரப்பட்டது அனைத்தும் சட்ட விரோத போதைப்பொருள் என்பது தெரிய வந்துள்ளது. மரப்பெட்டியில் வைத்து இந்த போதைப்பொருளை கடத்தி வந்துள்ளனர். மூங்கில் தோற்றத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை திறந்தபோது அதில் இருந்து போதைபொருள் கொட்டியுள்ளது. அனைத்தும் பவுடராக கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications