"வறுமை, பசிக்கொடுமையிலும் தளராத மனம்".. கடின உழைப்பு.. அமெரிக்காவில் விஞ்ஞானியான பழங்குடியின இளைஞர்
மும்பை: மகாராஷ்டிராவின் பழங்குடியின பகுதியில் பிறந்து ஒருவேளை கஷ்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர் ஹலமி என்பவர் தனது அயராத உழைப்பால் அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்து சாதித்து காட்டியிருப்பது பலருக்கும் தன்னம்பிக்கையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாகும்.
இந்த மாவட்டத்திலுள்ள சிர்ச்சடி என்ற பழங்குடியின கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாஸ்கர் ஹலமி.
கடின உழைப்பும், தன்னம்பிக்கை
இளம் வயதில் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு பல நாள்கள் பட்டினியுடன் உறங்கிய பாஸ்கர் ஹலமி தனது தளராத நம்பிக்கை, கடின உழைப்பு மூலம் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பையோ பாராமெடிக்கல் நிறுவனமான சிர்னஓமிக்ஸ் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சாதிப்பதற்கு எந்த ஒரு சூழலும் தடையில்லை. கடின உழைப்பும், தன்னம்பிக்கை மட்டுமே போதும் என்பதை கண்கூடாக காட்டும் வகையில் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பாஸ்கர் ஹலமியின் வாழ்க்கை சம்பவம் நடைபெற்றுள்ளது.
கஷ்ட காலத்தை கடந்து
சாதிக்க நினைக்கும் எத்தனையோ இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கதை போல அமைந்து இருக்கிறது இவரது வாழ்வின் ஒவொவொரு கட்டமும். தான் வளர்ந்த சிரச்சடி கிராமத்தில் மாஸ்டர் டிகிரி படித்த ஒரே நபரும் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபரும் நான் தான் என்று ஹலமி தெரிவித்துள்ளார். இளம் வயதில் தனது வாழ்க்கையில் இருந்த கஷ்ட காலத்தை கடந்து அதை சாதனையாக மாற்றியது எப்படி என்று பாஸ்கர் ஹலமி தெரிவித்துள்ளதாவது:
ஒரு வேளை கூட திருப்தியான உணவு இல்லை
சிறு வயதில் ஒரு வேளை கூட திருப்தியான உணவை சாப்பிட முடியாத நிலை இருந்தது. குறிப்பாக பருவமழைக்காலங்களில் எந்த பயிர்களும் இருக்காது. இதனால், எங்கள் குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். எந்த வேலையும் இருக்காது. இலுப்பை பூக்களை சமைத்து சாப்பிடுவோம். இதை எளிதாக சாப்பிடவும் முடியாது. ஜீரணமும் ஆகாது. நாங்கள் மட்டும் அல்ல..எங்கள் கிராமத்தில் வசிக்கும் 90 சதவிகிதம் பேருக்கு இதுதான் நிலமையாக இருக்கும். எங்களுக்கு இருந்த சிறிய தோட்டத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் எனது பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து வந்தனர்.
100 கி.மீ தொலைவில் பள்ளி
7 ஆம் வகுப்பு வரை படித்து இருந்த எனது தந்தைக்கு கஷன்சுர் வட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. 100 கி.மீட்டர் தொலைவில் இருந்த பள்ளிக்கு கிடைத்த போக்குவரத்து வசதியை பயன்படுத்திக்கொண்டு எனது சென்று வருவார். எனது தந்தை வேலைக்கு போய்விட்டாரா? இல்லையா? என்ற விவரமும் எனது அம்மாவுக்கு தெரியாது. மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர் வீடு திரும்பும் போது மட்டுமே எங்களுக்கு அவரது நிலை பற்றி தெரியும்.
உதவி பேராசிரியர் பணி
கல்வியின் நிலை பற்றி நன்கு அறிந்த எனது தந்தை என்னை படிக்க வைத்தார். உதவித்தொகை மூலமாக மேற்படிப்புகளையும் படித்தேன். படிப்பை முடித்த பிறகு நாக்பூரில் உள்ள லக்ஷ்மி நாராயணன் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் எனக்கு உதவி பேராசிரியாக பணி கிடைத்தது. மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் பாஸ் ஆகினேன். இருந்தாலும் தொடர்ந்து ஆய்வுப்பணிகளில் கவனம் செலுத்திய நான் அமெரிக்காவுக்கு சென்று பி.எச்.டி ஆய்வு படிப்பையும் மேற்கொண்டேன்.
ஊருக்கு வரும் போதெல்லாம்..
மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பை முடித்தேன்" என்றார். தற்போது முன்னணி பாராமெடிக்கல் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் ஹலமி, ஊருக்கு வரும் போதெல்லாம் தனது வீட்டு அருகே பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் சாதிப்பது எப்படி குறித்து வழிகாட்டுதல்களை அளித்து வருகிறாராம்.