24 ஆயிரம் கோடி சொத்து.. 2BHK வீட்டில் டாடாவின் தம்பி! ஒரு செல்போன் கூட இல்லை.. வாவ்!
மும்பை: இந்திய பணக்காரர்களின் ஒருவரான ரத்தன் டாடாவின் சகோதரர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவது பற்றிய தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால் இன்றைய இளம் தலைமுறையினர் அடுத்த நொடியே அதானி என்று சொல்வார்கள். அதானி, அம்பானி எல்லாம் இந்தியா விடுதலை பெற்ற பிறகு பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இந்தியப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தவர் டாடாவும் பிர்லாவும்தான். ஆகவேதான் இன்றைக்கும் கூட சாமானிய மனிதர்கள் பேச்சுவாக்கில் 'இவர் பெரியா டாடா' என்றும் 'பெரிய பிர்லா என்று நினைப்பு இவருக்கு?' என்றும் பேச்சு வாக்கில் சொல்கிறார்கள். அடிமட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்குப் பணக்காரர்கள் என்றால் அது டாடாவும் பிர்லாவும்தான்.

இந்தியப் பணக்காரர்களில் அதானியும் அம்பானியும் இருக்கலாம். தான் சம்பாதிக்கும் பணத்தில் அதிகப்படியாக தான தர்மம் செய்வதில் இன்று வரை முதல் இடத்தில் இருப்பவர் ரத்தன் டாடாதான். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரத்தன் டாடாவின் நிகர மதிப்பு சுமார் ரூ.3800 கோடி. அதாவது இவரது செல்வத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக அளித்த பிறகு உள்ள சொத்துகளின் மதிப்பு இது. சொல்லப்போனால் இந்தியாவில் பெரிய பணக்காரர் ரத்தன் டாடாதான்.
ஆனால், அவரது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான உரிமைக் கொள்கை காரணமாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகையை பில்லியனர்கள் பட்டியலில் ரத்தன் டாடா இடம்பெறவில்லை. இவர் நிறுவனத்தின் லாபத்தில் 65 முதல் 70% அறக்கட்டளைகள் மூலம் செலவு செய்யப்படுகிறது. தானம் செய்வதில் யார் வல்லவர் என உலகம் முழுக்க ஒரு பட்டியல் வெளியானால் அதில் ஒருவேளை ரத்தன் டாடா முதல் இடத்தில் இருப்பார்.
இப்போது எதற்காக இவரைப் பற்றி இவ்வளவு பெரிய பில்ட் அப் எனப் படிப்பவர்கள் நினைக்கலாம். இவரது குடும்பம் தானம் செய்வதில் மட்டும் பெரிய மனம் கொண்டு இல்லை. இவ்வளவு சொத்துகள் இருந்தும் எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுத் தருவதிலும் முதன்மையாக இருக்கிறது.
ரத்தன் டாடா தனது சகோதரர் பற்றிய ஒரு பழைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இவரது சகோதரர் ஜிம்மி நேவல் டாடா மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு சாதாரண 2பிஹெச்கே வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் ஆண்ட்ராய்டு மட்டும் இல்லை, சாதாரண மொபைல் போன் கூட பயன்படுத்துவது இல்லை.
இப்போது வரை செய்திகளை நாளிதழில் படித்துத்தான் தெரிந்து கொள்கிறார். இவர் ரத்தன் டாடாவின் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது. ஒருவேளை இவர் ஏழையோ என்று சிலர் நினைத்துவிடலாம். ரத்தன் டாடாவின் அப்பாவே மிகப்பெரிய பணக்காரர். அவர் தனது மகன்களுக்கு உரியச் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார். அதுவே இன்றைக்குப் பல ஆயிரம் கோடிகள் வரும்.
பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜிம்மி டாடாவின் சொத்து மதிப்பு ₹23,874 கோடி. அதாவது 2.99 பில்லியன் டாலர். இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 0.81% பங்குகளை வைத்துள்ளார், மேலும் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர் உள்ளிட்ட டாடா நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.
ஜிம்மி டாடா சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கிறார். இது அவரது தந்தை நேவல் டாடா 1989 இல் இறந்த பிறகு அவர் மரபுரிமையாக கிடைத்தது. இந்த அறக்கட்டளையில் பல கோடி சொத்துகள் உள்ளன. இவ்வளவு பெரிய கோடீஸ்வரர்தான் மும்பையில் 2BHK அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். இதுவே வியப்பான செய்தி. அதில் கூடுதலாக அவர் சொந்தமாக ஒரு மொபைல் போன்கூட வைத்திருக்கவில்லை என்ற தகவல் வியப்பைக் கூட்டி இருக்கிறது. மேலும் இவர் அதிகம் பயணம் செய்ததில்லை என்றும் தெரியவந்துள்ளது. இவர் புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்கவே அதிகம் விரும்புகிறார் என்கிறார்கள்.
மிகப்பெரிய தொழிலதிபரான இவர் அதைத் தாண்டி திறமையான ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். ஹர்ஷ் கோயங்காவின் பழைய பதிவு ஒன்றின்படி, ஜிம்மி முன்னாள் போட்டி வீரராக இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது. இவ்வளவு பெரிய செல்வந்தரின் அடக்கம் பலரை வியக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications